Wednesday, March 7, 2012

பாரதத்தின் இறையாண்மையைச் சிதைக்கும் “இஸங்கள்”


இந்தியாவின்  ஒருமைப்பாடும்,இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.1)பாகிஸ்தானை மையமாகக் கொண்டு  இந்தியாவெங்கும் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாதம் 2)சீனாவை மையமாகக்கொண்டு இந்தியாவில் செயல்பட்டுவரும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள் 3)மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப்படும் திராவிட,தலித் பிரிவினைவாதம்.இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும்,அலசல்களையும் உள்ளடக்கியது இந்நூல்.(புத்தகத்தின் பெயர்: உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் ஆசிரியர்கள்:ராஜிவ் மல்ஹோத்ரா=அரவிந்தன் நீலகண்டன்,வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,பக்கங்கள்:768 விலை:ரூ.425/-)


அமெரிக்க,ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட,தலித்பிரிவினை வாதத்தை வளர்க்க களமிறக்கப்படும் மனித உரிமை அமைப்புக்கள்,கல்வியாளர்கள்,சிந்தனை வட்டங்கள்,மத அமைப்புகள் ஆகியவை நிழலுருவில் செயல்படும்விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது.ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு,புனித தாமஸ்  பற்றிய கட்டுக்கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ‘திராவிட கிறிஸ்தவம்”ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.தலித்களை இந்தியாவின் மற்ற அனைத்து சமூகங்களிலிருந்தும் வேறுபட்ட,எதிரிடையான இனமாக சித்தரிக்கும் விஷ வித்துக்களை விதைக்கும் அமைப்புகள் குறித்தும்,உலகளவில் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று போட்டிபோடும் அதிகார சக்திகள் இந்தியாவுக்கு எதிராக எப்படி குயுக்தியுடன் ஒன்றிணைந்து வேலை செய்கின்றன என்பது குறித்தும் நூல் அம்பலப்படுத்துகிறது.நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஆறு ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர்.அந்த ஆய்வுகளின் விளைவாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.


மேற்கத்திய நாடுகளால் தூண்டிவிடப்பட்ட ஆனால் பெரும்பாலும் உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட விஷயங்களையும்,குறுகிய காலத்திலேயே மேற்கத்திய சக்திகள் விரும்பிய பலனை அளித்ததோடு மட்டுமல்லாமல் நீண்டகால நோக்கில் இந்தியாவைப் பிளவுபடுத்தி வைக்கக் கூடிய புரட்டு வாதமான ஆரிய திராவிட இனப்பாகுபாட்டுக் கொள்கை எவ்வாறு உருப்பெற்று வளர்ந்திருக்கிறது என்பதையும்,இதனால் எதிர்காலத்தில் நம் இறையாண்மைக்கும்,தேச ஒருமைப்பாட்டிற்கும் வரப்போகிற ஆபத்துக்களையும் இந்த நூல் தக்க ஆதாரங்களுடன் விரிவாக அலசுகிறது.



மாக்ஸ் முல்லர் “ஆரியன்” என்பதை மொழியியல் வகைப்படுத்தலாகத்தான் முன்வைத்தார்.ஆனால்,கிறிஸ்தவ ஆங்கிலேயன் அதை ஒரு இனமாகவே மாற்றிவிட்டான்.இதன் மூலம் பாரம்பரியமான இந்து மக்களை பாகுபடுத்தினான்.ஆரியரல்லாதோரை புறக்கணிக்கப்பட்டோராகவும்,விளிம்புநிலை மக்களாகவும் காட்டினான்.மேலும் ஜெர்மனியர் ஆரியரை விட மேன்மையானதோர் இனமாக அடையாளப்படுத்தினான்.அதே சமயத்தில் தென் இந்தியாவில் கிறிஸ்தவ சபைகள் திராவிட இன அடையாளங்களை உருவாக்கின;தமிழ்ப் பண்பாட்டை அனைத்து இந்திய பண்பாட்டிலிருந்து திட்டமிட்டு துண்டித்தன” என்பதையும் எடுத்துரைக்கின்றனர் ஆசிரியர்கள்.

ராபர்ட் கால்டுவெல்லை முன்னோடியாகக் கொண்டு பல மதபோதகர்கள் இந்தியர்களை மொழியியல் ரீதியாகவும்,மதரீதியாகவும் பிரித்து,பிராந்தியம் சார்ந்த இன அடையாளம் தந்து,தமிழர்களிடம் தமிழ் பண்பாடு தனித்தன்மை வாய்ந்தது அது ;இந்தியாவின் பிறபகுதிகளிடமிருந்து வேறுபட்டது என்று கூறினார்கள்.இதுவே பிற்கால இனவாத அரசியலுக்கு அடிப்படையானது என்பதையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.


இப்புத்தகத்தில் ஆசிரியர்கள் இந்துக்களை மதம் மாற்ற பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன என்று அற்புதமாக விளக்கியுள்ளனர்.முதலில் இந்துக்களை பல துண்டுகளாகப் பிரிக்க வேண்டும்;அப்பிரிவுகளின் பலவீனங்கள் என்ன? அந்த பலவீனங்களை எப்படி பயன்படுத்துவது? மதமாற்றத்துக்கு எதிராக ஒவ்வொரு பிரிவிலும்(ஜாதியிலும்!) எவை தடையாக உள்ளன.அவற்றை எப்படி உடைக்கலாம்? என ஒரு பன்னாட்டு நிறுவனம் சந்தையை எப்படி அணுகுமோ,அதுபோல இவை இந்து மத மக்களை அணுகி,தங்களது சதித் திட்டத்தை சாமர்த்தியமாக நிறைவேற்றிய வரலாற்றினை அம்பலப்படுத்துகின்றனர்.
இத்தகைய பிரிவினை வாத நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இயங்கும் அறிவியக்கவாதிகள்,போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் போன்றோரின் உதவிகளையும் பெற்று வருவது குறித்தும் தமது கவலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர் ஆசிரியர்கள்.

மறுத்துச் சொல்ல முடியாத திட்டவட்ட ஆதாரங்களுடன் இந்தியாவை உடைக்க முயலும் அந்நிய சக்திகளின் சதிகளை அரங்கேற்றியிருக்கும் இந்நூல்,ஒவ்வொரு தமிழரும்,இந்துவும்,தேசத்தை நேசிக்கும் இந்தியரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஆய்வு ஆவணத் தொகுப்பு.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 31,32;மார்ச் 2012.
ஓம்சிவசிவஓம்

1 comment: