Sunday, November 10, 2019

லிங்கமும் லிங்கனும்




லிங்கமும் லிங்கனும்

ஒரு சமயம் பத்திரிகையில்(தினத்தந்தி பெங்களூர் பதிப்பு) ஆயுத பூஜை தின சிறப்பு மலருக்கு விளம்பரம் கொடுத்திருந்தோம்.அதைப் படித்துவிட்டு ஒரு நபர் வந்திருந்தார்;
அவர் பெயரை கூறினர் லிங்கன் என்றது என் காதில் லிங்கம் என்று கேட்டுவிட்டது.நான் வரை அப்படியே அழைத்தேன்;


பழகுவதற்கும் மரியாதைக்கும் உரியவராக நடந்துகொண்டார்.அவருடைய தொழில் பற்றியும்,வருமானம் பற்றியும் கேட்க வந்திருந்தார்;அதற்குண்டான பதிலும்,வழிமுறையும் கூறினேன்;அதனால்  அவர் நல்ல நிலைக்கு வந்தார்;என் மீதும்,மஹான் ஆத்மா மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

அவர் பிறகு எத்தனையோ முறை வரும்போதெல்லாம் தன்னுடைய பெயரை ஆப்ரஹாம் லிங்கன் என்று கூறியும் நான் ஆரம்பத்தில்   இருந்து லிங்கம் என்று அழைத்துப் பழகிப் போனதால்,நான் அவ்வாறே அழைத்துக் கொண்டிருந்தேன்.பூஜை சாமானும் பழங்களும் வாங்கித் தருவது இவருக்கு வாடிக்கை.

நான் பேசுவதை எவ்வளவு பொறுமையாக கேட்க முடியுமோ அவ்வளவு பொறுமையாக கேட்பார்.வேற்று மதம் என்று நம் ஹிந்து கடவுள்களை வணங்குவது தவறு என்ற எண்ணமெல்லாம் அவரிடம் இல்லை.இப்படிப்பட்டவர்கள் இங்கு அவ்வளவாக யாரும் இல்லை.

நான் மஹான் ஆத்மாவிடம் பேசும் போது கேட்டேன்.லிங்கன் எப்படி இந்த குணம் உடையவராக உள்ளார் என்று.ஏனெனில் இங்குள்ளவரும் சரி அல்லது வேறு சிலரும் சரி(கிறிஸ்தவர்கள்) தங்கள் மதத்தை உயர்வாக கருதுவர்.பிற மதத்தை ஏற்றுக் கொள்வதில்லை.அதனால் நான் அவ்வாறு மஹானிடம் கேட்டேன்.

"நீ லிங்கனை லிங்கம் என்று அழைக்கும் போதெல்லாம் நீ வழிபடும் சிவபெருமானை (லிங்கம்) நினைத்துக் கொள்கிறாய்.சில சமயங்களில் பெயருக்கேற்றவாறு அவர்கள் நடந்துகொள்வார்கள்.உதாரணத்திற்கு உன் பெயர் போல் நீ மாறிவிட்டாய் அல்லவா அது போல" என்றார் மஹான்.

நான் இந்துவாக உள்ளேன்.பரசுராம் என்ற என் பெயருக்கு ஏற்றபடி நான் குருவாகவும் ஆன்மீகவாதியாகவும் மாறி பொது சேவை செய்வேன் என்பதை முன்னமே மஹான் ஆவிப் பெரியவர் கூறியுள்ளார்.அதை நான் கட்டுரையாகவும் எழுதியுள்ளேன்(இரண்டு வருடங்களுக்கு முன்)

ஆனால்,லிங்கன் நம் இறைவனை ஏற்று வழிபடும் இந்து அல்ல.அதோடு கிறிஸ்துவர்கள் நம் இந்து கடவுள்களை பழிப்பார்கள்;ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.அப்படிப்பட்ட கிறிஸ்தவ நபர் லிங்கன் எப்படி பெயருக்கேற்றவாறு மாறுவார் என்று நான் மஹான் ஆவிப் பெரியவரிடம் வாதாடினேன்.

என் வாதத்திற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.அது என்னவென்றால்,தற்போது இந்துக்களாக இருந்து கிறிஸ்துவாக மாறி இருந்தால்,ஒரு வேளை முன்னமே நம் தெய்வங்களை வணங்கிய பழக்கம் காரணமாக பக்தி ஏற்பட்டு மாற வழி உண்டாகலாம். ஆனால்,லிங்கனோ  காலம் காலமாக தாத்தா,தந்தை என்று மூதாதையர்களே கிறிஸ்துவர்கள் என்பது தான். எனக்கு இவர் எப்படி மாறுவார் என்று ஒரு யோசனை ஏற்பட்டது.

அப்போது மஹான் கூறினார். “நீ வேண்டுமானால் சிறிது நாட்களில் அவர் மாறி வழிபடுவதுமல்லாமல் பூஜை சாமான் பிரசாதம் எல்லாவற்றிற்கும் வழி செய்வார்.அவரே கொண்டு வந்து கொடுப்பார்”

இந்த பேச்சை என்னால் முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; ஏனென்றால்,பைபிளில் விக்ரஹத்தை வழிபடுவதோ பிரசாதங்களை உண்பதோ பாவம் என்று கூறியுள்ளதை சிலர் கூறக் கேட்டுள்ளேன்.என்னிடம் வரும் எத்தனையோ கிறிஸ்துவர்கள் கற்பூர ஆரத்தி காட்டும் போது வணங்குவதில்லை.விபூதியை தொடவோ இட்டுக் கொள்ளவோ சம்மதிப்பதில்லை என்பதை நான் கண்டுள்ளேன்.இப்படி இருக்கும் போது லிங்கன் எப்படி மாறுவார் என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது.

நான் சொன்னால் நீ ஏற்க மறுக்கிறாய்.ஆனால்,காலம் மாறும் போது அப்போது இந்த விஷயம் பற்றி கூறி நீ சந்தோஷம் படத்தான் போகிறாய் என்று ஆவி மஹான் கூறினார்.இதைப் பற்றி நாளடைவில் நான் மறந்துவிட்டேன்.எப்போதாகிலும் பிரச்சனை இருக்கும் போது லிங்கன் வருவார்;பிறகு சென்ற பின் போன் செய்து நன்றி தெரிவிப்பார்.

ஒரு முறை லிங்கன் வரும் போது நான் வில்வ இலை பறித்துக் கொண்டு இருந்தேன்.இது என்ன இலை? இது எதற்காக பறிக்கிறீர்கள்? இதில் அதிக முள் உள்ளதே என்று கேட்டார்.இதன் பெயர் வில்வ இலை இதை லிங்க வழிபாட்டிற்கு பயன்படுத்துவேன்.இந்த இலையை சிவலிங்கத்தின் மேல் போட்டால் பல பாவங்கள் போகும்.ஆயிரம் தங்கப் பூவிற்குச் சமம் என்று கூறினேன்.அவர் ஆச்சரியப்பட்டார்;

இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? இன்னும் நிறைய விஷயம் உள்ளது என்றேன்.என்னென்ன? என்று கேட்டார் லிங்கன்.ஒரு வில்வ இலையை லிங்கத்தின் மீது அர்ச்சித்தால்,பல  ஏரி,குளங்கள் வெட்டிய புண்ணியமாகும்; பல ஏழ்மையானவர்களுக்கு திருமணம் செய்த புண்ணியமும் கிட்டும் என்று நான் அடுக்கடுக்காக வில்வ இலையின் மகத்துவத்தைப் பற்றி கூறினேன்.

நம் இந்துக்கள் இந்த தகவல்களை ஏற்றுக் கொள்வர்.ஏனெனில் சிவபுராணத்தில் இந்த விஷயங்கள் உள்ளதை படித்திருப்பீர்கள்.ஆனால்,மற்ற மதத்தவர்கள் இதையெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை.இந்த சாதாரண இலையில் இவ்வளவு பலன்கள் இருக்க வாய்ப்பில்லை என்று சிலர் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்.அப்படித்தான் லிங்கனும் கூறுவார் என்று எதிர்பார்த்தேன்.

லிங்கன் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்து பேசினார்.இந்த வில்வ இலை வழிபாட்டை நான் கூட செய்யலாமா? என்று கேட்டார்.அதோடுல்லாமல் இதற்காக நான் மதம் மாற வேண்டுமா? என்றும் கேட்டார்.ஏனெனில், அவர்கள் (கிறிஸ்துவர்) மதத்தில் மதம் மாறினால் தான் இறைவனை வழிபட முடியும்.அப்போது தான் நம் வேண்டுதலை இறைவன் ஏற்றுக் கொள்வார் என்பது அவர்களின் கருத்து.

மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.சிவனை நினைத்தாலே அவர் சந்தோசப்படுவார்.அவர் பெயரை உச்சரித்தாலோ வேண்டினாலோ சிவன் வேண்டியதைத் தருவார் என்று பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) கூறினேன்.நீங்கள் இவ்வாறெல்லாம் வழிபட ஆரம்பித்தால் சகல பாக்கியங்களும் நில புலன்களும் கூட கிடைக்கும் என்றூ கூறினேன்.இவர் என்ன செய்யவா போகிறார் என்ற எண்ணத்துடன்!

லிங்கன் ஒரு லிங்கம் வேண்டும் கிடைக்குமா? என்று கேட்டார்.மாத இதழ்கள் வாங்கும் போது உடன் அன்பளிப்பாக கிடைத்த சில லிங்கங்கள் என்னிடம் இருந்தன.அவற்றில் ஒன்றை கொடுத்தேன்.அவர் பெற்றுக் கொண்டார்.அந்த நேரத்தில் எனக்கும் வில்வ இலை தட்டுப்பாடு இருந்தது.நான்கே நான்கு குச்சிகள் 40 ரூபாய்.அதைப் பறித்தால் 20,30 இலைகள் கூட கிடைக்காது. 

என் அருகில் இருந்த வில்வ மரத்தையெல்லாம் வெட்டிவிட்டு அங்கெல்லாம் கட்டிடம் கட்டிவிட்டிருந்தனர்.இஷ்டம் போல் மரத்தில் பறித்துக் கொண்டிருந்த எனக்கு பணம் அதிகமாக கொடுத்து வாங்குவது கஷ்டமாக இருந்தது.அப்போது தனக்கும் கொஞ்சம் இலை கொடுங்கள் என்று லிங்கன் கேட்டார்.அவருக்கும் சிறிது கொடுத்துவிட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

எனக்கே வில்வ இலைக்கு கஷ்டம் வந்துவிட்டது.இதில் இவர் வேறு புதியதாக கேட்கிறாரே என்று தான் என் மைண்ட் வாய்ஸை கவனித்தாரோ என்னவோ லிங்கன், “ஐயா,இந்த இலையை நான் கொண்டு வந்து தந்தால்,நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்றும் கேட்டார். 

காடழிந்து மரங்கள் எல்லாம் அழிந்ததுடன் வில்வ மரங்களும் வெட்டப்பட்டு நானே இந்த கொஞ்சம் இலைகளுக்கு பாடாய்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.இருந்த கொஞ்சம் இலையிலும் லிங்கன் கொஞ்சம் வாங்கிக் கொண்டதால் ஏன் தான் இவருக்கு வில்வ இலையைப் பற்றிக் கூறினோமோ என்று நினைத்த போது நிறைய இலைகள் தருகிறேன் என்றால் லட்டு தின்ன ஆசை தான் என்பது போல் தோன்றியது எனக்கு.


"கொண்டு வாங்க புண்ணியம் உண்டு" என்று கூறினேன்.ஒன்றிரண்டு நாட்கள் கழித்து வந்தார் லிங்கன்.இரண்டு கோணிப்பைகளில் இலைகளை பறித்து வந்திருந்தார்.நான்  அதைப்பார்த்து வியந்து போனேன்.எனக்கு கோடிக்கணக்கில் பணம் வந்திருந்தால் கூட அவ்வளவு சந்தோசம் ஏற்பட்டிருக்காது.அளவிலா சந்தோசம் ஏற்பட்டது.அதைப் பார்த்து லிங்கனும் ஆச்சரியப்பட்டார்."இவ்வளவு இலை எப்படி கிடைத்தது.மரத்தையே மொட்டை அடித்துவிட்டீர்களா?" என்று கேட்டேன்.


“இல்லை ஐயா,நான் போகும் கோல்ப் மைதானத்தில் பெரிய வில்வ மரம் இருந்தது.அங்குள்ள தோட்ட வேலை செய்பவர் மூலம் பறித்தேன்.அது சரி,இந்த இலைக்கு இவ்வளவு சந்தோசப்பட்டீர்களே! அது போதும்!” என்றும் சொன்னார்.

எனக்கு ஒரு மாதம் பிரச்சினை தீர்ந்ததே.பணமோ,அரிசி,பருப்போ சாப்பாடு பிரச்சினையைக் கூட சமாளித்துவிடுவேன்.யாரோ கொடுத்து விடுவார்கள்.ஆனால்,இந்த வில்வ இலை கிடைப்பது மிகச் சிரமம் என்று கூறினேன்.

அப்போது மஹான் பேசினார்.  “பார்த்தாயா உனக்கு இலை கிடைப்பது கஷ்டம்! ஆனால்,இவருக்கோ சுலபம்!! அதுபோலத் தான் இந்த காலத்தில் இடம் வாங்குவதோ,கிடைப்பதோ அரிது! மிகக் கஷ்டம்!! விலை அதிகம் என்று கூறினாய்!!!ஆனால்,இவர் செய்யும் பூஜைக்கு நிறைய இடமும் நிலமும் லிங்கனுக்கு கிடைக்கப் போவதை நீ பிறகு அறியப் போகிறாய்!!!” 


இந்த விஷயத்தை நான் லிங்கனிடம் கூறவில்லை.வில்வ இலை கொண்டு வந்து கொடுத்ததற்கு ஏதோ கதை விடுகிறார் என்று அவர் நினைக்கக்கூடாது என்று தான்.சிறிது நாட்கள் கழித்து லிங்கன் வந்தார்.

“ஐயா சிவபூஜை செய்த பின் மன நிம்மதி ஏற்பட்டது.பிறகு 15 ஏக்கர் நிலமும் கிடைத்தது” என்றார்.என்னால் நம்ப முடியவில்லை;பிரமித்துப் போனேன்.

அந்த இடத்தை காண்பிப்பதற்காக என்னை அழைத்தார்.நான் புறப்பட்டு உடன் சென்றேன்.விலை உயர்ந்த கார்! அதில் அழைத்துப் போனார்.அவர் என்னிடம் வரும் போதெல்லாம் கார் சாவிகளை தன் பேண்ட்டின் பெல்ட் பட்டியில் சொருகி கொண்டிருப்பார்.அதைப் பற்றி நான் கேட்கலாம் என்று நினைப்பேன்.ஏனோ இங்கிதம் கருதி கேட்கவில்லை. 

நகரத்தில் இருந்து 30 கி.மீ.தொலைவில் இங்கு நந்திமலை என்ற சுற்றுலாத்தலம் உள்ளது.உயர்ந்த ரம்மியமான இடம் அந்த இடத்தில் நிலங்களின் விலை அதிகம்.அந்த இடத்தில் நிலம் வாங்குவது கடினம்.அப்படிப்பட்ட இடத்தில் இவ்வளவு நிலம் எப்படி வாங்கினார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.யாரோடதோ என்று நான் நினைப்பதை லிங்கன் புரிந்து கொண்டார் போலும்!

காரைத் திறந்து நிலத்தின் பத்திரத்தை கொண்டு வந்து காண்பித்தார்.அவர் பெயரில் தான் நிலம் இருந்தது. ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்’ என்று அவரைக் கேட்டேன். ‘நான் கார் டிரைவர்’ என்றார்.கார் டிரைவர்கள் சம்பாதிக்கும் சம்பளத்தில் வீடு வாடகைக்கும் சாப்பிடுவதற்கே சரியாக இருக்கும்.எப்படி நிலம் வாங்கினார்? என்று யோசித்தேன்.

மஹான் கூறினார்: “லிங்கன்  லிங்கத்தை வணங்கி பூஜிக்க எல்லாமும் கிடைத்தது” என்றார்.எப்படி என்று எப்போதுமே மஹானைத் தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
சிவபூஜை செய்ய சகல செளபாக்கியங்களும் கிட்டும் எனும் போது இது எம்மாத்திரம் என்றார் மஹான். நான் லிங்கனை எப்படி கேட்கலாம் என்று யோசித்தேன்.

“என் சம்பளமும் கூட்டியுள்ளார்கள்.இப்போது என் ஓனரிடம் எனக்கு நல்ல மரியாதை உள்ளது.என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்” என்றார் லிங்கன்.இந்த பதிலில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.நிலம் பற்றி கூற மாட்டாரா என்று தான்.இந்த நிலம் பல கோடி பெருமானம் உள்ளதல்லவா? இது பற்றி என்ன கூறப் போகிறார் என்று எதிர்பார்த்தேன்.

“நீ கூட இந்த சிவபூஜை செய்து சகல வசதி வாய்ப்புகளையும் அடைய நான் உதவ வில்லையா?” என்று மஹான் ஆவி கூறினார்.அதுவும் உண்மைதான்.அதனால்,லிங்கன் செய்த பூஜைக்கு சிவன் மனம் நெகிழ்ந்து இந்த நிலபுலன் வசதிகள் ஏற்பட வழிவகுத்தது எவ்வாறு என்பதை மஹான் கூறினார்.

லிங்கனின் முதலாளி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். துபாய்,சிங்கப்பூர்,கனடா போன்ற எல்லா வெளிநாடுகளிலும் அவருக்கு கம்பெனிகள்    உள்ளன.ஆனால்,அவரின் வீடும் அடுக்கு மாடி கட்டிடங்களும் பெங்களூரில் இருக்கின்றன.அவர் வரும் போது மட்டுமே எங்களுக்கு கார் ஓட்டுவது மற்ற நேரங்களில் இவர் தான் முதலாளி என்ற நிலை;

இந்த சமயத்தில் தான் இவன் (லிங்கன்) சிவபூஜை செய்தால் வசதி வாய்ப்புகள் உண்டாகும் என்று மஹான் கூறிய நேரம் பல மாற்றங்களை மஹான் மூலம் அனுபவித்த லிங்கன் இந்த வழிபாட்டை பக்தியுடன் செய்ய இந்த நிலபுலன் வசதி ஏற்பட்டுள்ளது.வெளியூர் வாசிகள் இங்கு நிலபுலன் வாங்க முடியாது.அப்படி ஒரு சட்டம் உண்டு.அப்போது தான் இந்த  நிலங்களை லிங்கன்முதலாளி  லிங்கன் பெயரில் வாங்கியுள்ளதை மஹான் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட நகரங்களில் ஒரு அடி மண் வாங்க வேண்டுமாயின் பல லட்சங்கள் வேண்டும் என்று நிலைமை.லிங்கனின் விசுவாசமான சிவபூஜைக்கு ஈசனின்   அருளால் கிடைத்திருக்கின்றது.


இதுபோன்றே இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு,ஒரு படிக்கும் மாணவன் எனக்கு கஷ்ட காலத்தில் வில்வ இலை பறித்துக் கொடுத்து நல்ல பதவி உயர்வு என்ற அந்தஸ்தை அடைந்ததை 2015 ஆம் ஆண்டு கட்டுரையில் தெரிவித்தேன்;


வில்வ இலை மகத்துவமானது! அதனால்,லிங்கனுக்கு ஏற்பட்ட மாற்றம் போலவே அடுத்த கட்டுரையிலும் தொடர்ந்து ஒரு வாழ்க்கை அமைந்ததையும் தெரிவிக்கிறேன்.வணக்கம்,நன்றி! மஹானுக்கும் உங்களுக்கும் தான்;வாழ்க வையகம்!!!


அனுபவம்:திருமுருகன் ஆன்மீக மையம்,திரு.மீடியம் அ.பரசுராம்,

பெங்களூரு மாரத்தஹள்ளி,

(கிளை விழுப்புரம் அருகில்)

செல் எண்கள்:98451 65327/98849 97383


நன்றி:ஆவிகள் உலகம்,பக்கம்29,30,31,32,33;

வெளியீடு நவம்பர் 2019

                                    

No comments:

Post a Comment