Tuesday, December 25, 2018

ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏன் ஜோதிட ஆலோசனை தேவை?




நம் கர்மவினைகளைத் தீர்க்கும் சக்தி (கலிகாலத்தில் மட்டும்) அன்னதானத்துக்கு உண்டு; அன்னதானத்தை எப்போதும்,எங்கேயும் செய்யலாம் என்ற பொதுவிதி இருந்தாலும்,நாம் குறைந்த காலத்தில் அதிகமான நற்பலன்களை அடையவே விரும்புகிறோம்;இதற்கு அருணாச்சல ஸ்தல புராணம் வழிகாட்டுகிறது.


நமது ஊரில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம்பேர்கள் வீதம் ஓராண்டுக்கு தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ அதைவிட அதிகமான புண்ணியம்,காசியில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;

நாம் காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒரு வருடம் முழுவதும் தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகபுண்ணியம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில்  இருக்கும் திரு அண்ணாமலை(திருவண்ணாமலை)யில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நபருக்கு மூன்று வேளைகள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அதுவும்,துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த உண்மை இது:நாம்  பிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் ஒரு கோடி பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகப் புண்ணியம் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் ஒரே ஒருவருக்கு காலை,மதியம்,மாலை என்று மூன்று வேளைகளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அது சரி! இந்த உண்மையைக் கண்டுபிடிக்க எதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின?


துவாதசி திதி வரும் நாட்களின்  பட்டியலை ஒரே நாளில் பஞ்சாங்கத்தின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம்;ஒரு தமிழ் மாதத்தில்  இரண்டு முறை துவாதசி திதி வரும்;வளர்பிறை துவாதசி,தேய்பிறை துவாதசி.எனவே,ஒரு வருடத்துக்கு 24 துவாதசி திதிக்கள் வருகின்றன.

அடுத்து இவைகளில் ஒரு முழுநாளில் துவாதசி திதி என்பது வெறும் 12 முதல் 18 நாட்களே வருகின்றன;ஏன் அப்படி? இந்து தர்ம காலக் கணக்குப்படி, ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான கால கட்டமே ஒரு முழு நாள் ஆகும்.நாம் பின்பற்றும் காலண்டரும்,கணக்கும் கிறுஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டது;நள்ளிரவு மணி 12 ஆனதும் அடுத்த நாள் துவங்குவதாக மேல்நாடுகள் பின்பற்றுகின்றன;இது முழுத் தவறு.

அடுத்தபடியாக எப்போது துவாதசி திதி அன்னதானம் செய்வது?


காலையில் ஆறு மணி முதல் எட்டு மணிக்குள்ளும்;மதியம் பனிரெண்டு மணி முதல் இரண்டு மணிக்குள்ளும்;இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளும் அன்னதானம் செய்வது சிறப்பு.இதை உணர்ந்து கொள்ள சுமார் ஏழு முதல் ஒன்பது தடவை அண்ணாமலைக்குச் செல்ல வேண்டியிருந்தது;நான் ஒன்றும் செல்வ வளம் மிக்கவன் அல்ல;எனது சம்பளத்திலும்,வருமானத்திலும் சேமித்தேன்;சேமித்தப் பின்பு, துவாதசி வரும் நாளில் விடுமுறை எடுத்து,எதற்காக அண்ணாமலைக்குச் செல்கிறேன்? என்பதை எவரிடமும் சொல்லாமலும்,பயணிப்பதையே ரகசியமாக வைத்துக்கொண்டும் புறப்படுவது வழக்கம்.(காரணம்,கண் திருஷ்டியால் சில முறை அண்ணாமலைப்பயணம் ரத்தாகியிருக்கிறது).

 அண்ணாமலைக்கு  எனது ஊரிலிருந்து 400 கி.மீ.தூரம் பயணித்து,இரண்டு இரவுகளும்,ஒரு பகலும் அண்ணாமலையில் தங்கியிருந்து அன்னதானம் செய்து கண்டறிந்த உண்மை இது.சும்மா இல்லை;இந்த ஆராய்ச்சி செய்யும் போதெல்லாம் பஞ்சாங்கமும்,அடிப்படை ஜோதிட அறிவும்,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் அருளாசியும் மட்டுமே துணையாக இருந்தன;

அண்ணாமலை ஸ்தல புராணத்தில் " துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால்,காசியில் நம் வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தை விட அதிக புண்ணியமும்,மறுபிறவியில்லாத முக்தியும் கிடைக்கும்" என்ற ஒருவரியே கை.வீரமுனியாகிய எம்மை இந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்யத் தூண்டியது;

இந்த ஆராய்ச்சியின் முடிவை மஹாவில்வம் வலைப்பூவில் விரிவாக சென்ற வருடங்களில் ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறோம்.ஆனால்,இந்த ஆன்மீகமும் ஜோதிடமும் கலந்த ஆராய்ச்சி செய்யும் போது மறுபிறவியில்லாத முக்தி கிடைக்குதோ இல்லையோ,வாழ்க்கையில் இருந்து வந்த அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது;ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த பலன்களைத் தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் துவாதசி திதி வரும் நாட்களின் பட்டியலை மஹாவில்வம் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறோம்;கூடவே அதற்கான விளக்கத்தையும்!


ஆரம்பத்தில் இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒருவருக்கு இன்று மதியமும்,இரவும் மட்டும் அன்னதானம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பியதுண்டு;ஊருக்குத்  திரும்பிய சில நாட்கள் / வாரங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை;

அடுத்தகட்டமாக,இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;இன்று மதியம்,இரவு;நாளை காலை என்று மூன்று வேளைகளுக்கும் ஒரு துறவி வீதம் அன்னதானம் செய்துவிட்டு  ஊருக்குப்புறப்பட்டோம்;பலன்கள் கிடைக்கவில்லை;



மூன்றாவதாக ஒரு நாள் பகல் முழுவதும் துவாதசி திதி இருக்கும் நாளைத் தேர்ந்தெடுத்து அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;மூன்று வேளையும் தலா 18 பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;காலையில் 18 சாதுக்கள்,மதியம் 18 சாதுக்கள்;இரவு 18 சாதுக்கள் என்று அன்னதானம் செய்துவிட்டு,இரவில் கிரிவலம் சென்றுவிட்டு,ஊருக்குச் சென்றோம்.மறு நாளே சில பலன்களை உணர முடிந்தது.


நான்காவதாக மிகப் பெரிய அளவில் திட்டமிட்டோம்;சுமார் நூறுபேர்களுக்குத் தேவையான பணத்தை சம்பளத்திலும்,ஜோதிட தட்சிணைகளிலும் சேமித்தோம்;முழு துவாதசி திதி வரும் நாளுக்கு முதல் நாள் இரவே இங்கு வந்தோம்;மறு நாள் காலையிலும் இரவிலும் கிழக்குக் கோபுர வாசலில் சுமார் 27 பேர்களுக்கு(காலையில் ஒன்பது சாதுக்கள்,மதியம் ஒன்பது சாதுக்கள், இரவில் ஒன்பது சாதுக்கள்) அன்னதானம் செய்துவிட்டோம்;காலை ஒன்பது மணிக்கே நூறு பேர்களுக்கு உணவகத்தில் ஆர்டர் கொடுத்தோம்;உணவகங்களில் ஆர்டர் கொடுப்பது,டோக்கன் வாங்கிக் கொண்டு அந்த டோக்கன்களை சாதுக்களுக்கு விநியோகம் செய்வது அண்ணாமலையில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது ஆர்டர் கொடுக்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது;சரியாக மதியம் பனிரெண்டு மணியளவில் ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து,அதில் நூறு பேர்களுக்குரிய உணவுப் பொட்டலங்களை நிரப்பினோம்;கிரிவலப் பாதை முழுவதும் அன்னதானம் செய்து விட வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தின் அருகிலேயே அனைத்து உணவுப்பொட்டலங்களையும் தானமாகக்  கொடுத்துவிட்டோம்.அப்போதுதான் ஒரு உண்மை உறைத்தது; அக்னி லிங்கத்தின் அருகில் ஏராளமான அன்னதான மடங்களும்,ஆஸ்ரமங்களும் இருக்கின்றன;எனவே,பெரும்பாலான சாதுக்கள் அக்னி லிங்கத்தின் அருகிலேயே முகாமிட்டிருக்கிறார்கள் என்பது!!!



நாம் ஒரே ஒரு துவாதசி திதியைத் தேர்ந்தெடுத்து,அண்ணாமலைக்கு வரத் திட்டமிடுகிறோம்;ஜோதிட அறிவினாலும்,அருணாச்சல ஸ்தல புராணத்தின் வழிகாட்டுதலாலும் அண்ணாமலைக்கு வருகை தந்து அன்னதானம் செய்கிறோம்;ஆனால்,ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளும் அக்னி லிங்கத்தின் அருகில் இருக்கும் இந்த ஆஸ்ரமங்கள் அன்னதானத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றன;என்று எண்ணும்போது பொறாமை வந்தது;சில நாட்களிலேயே அந்த பொறாமையும் காணாமல் போனது; 


ஏனெனில்,குடும்பஸ்தராகிய நாம் எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில்,எத்தனையோ சிரமங்களுக்கும் மத்தியில் விடாப்பிடியாக நமது சொந்தப் பணத்தினை சேமித்து வைத்து,இங்கே வந்து அன்னதானம் செய்வதன் மூலமாக நாம்,நமது குழந்தைகள்,நமது பேரக் குழந்தைகள்,நமது பெற்றோர்கள்,நமது தாத்தா பாட்டிகள் என நமது பரம்பரைக்கே புண்ணியத்தைச் சேர்க்கிறோம் என்று நினைக்கையில் பொறாமை கரைந்து போனது;

ஐந்தாவதாக முழுமையாகவும்,முறையாகவும் திட்டமிட்டு இன்னொரு துவாதசி திதிக்கு அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;எம்மோடு நான்கு (ஜோதிட)வாடிக்கையாளர்கள் அப்போது வந்தார்கள்;காலையிலும்,மாலையிலும் கிழக்குக்கோபுர வாசலில் அன்னதானம் செய்தோம்;மதிய நேரத்தில் வழக்கம் போல ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து சுமார் 120 பேர்களுக்கான உணவுப்பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கிரிவலம் புறப்பட்டோம்;மன்னிக்கவும்,ஆட்டோவில் அன்னதான வலம் செய்யப் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,அரசு கலைக்கல்லூரி இருக்கிறது;

அதற்கு கொஞ்சம் முன்பாகவே நிறுத்திக் கொண்டு எண்ணி ஒன்பதே ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;பிறகு,ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் தலா ஒன்பது  பேர்களுக்கு அன்னதானம் செய்ய முடிந்தது;குபேர லிங்கத்திலும்,ஈசான லிங்கத்திலும் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்தோம்;எங்கள் ஏக்கம் அண்ணாமலையாருக்குத் தெரிந்தது போலும்!

 சில சாதுக்களை அரை மணி நேரம் கழித்தே தரிசிக்க முடிந்தது;இந்த பயணத்து முதல் நாள் கோயம்பத்தூருக்கு அருகில் இருந்து ஒரு  வாசகர் நீண்ட நேரம் பேசினார்;பேச்சுவாக்கில் ஈசான லிங்கத்தின் அருகில் சுமார் பதினாறு சித்தர்களின் ஜீவசமாதிகள்  இருப்பதாகவும்,அந்த பதினாறு பேர்களில் ஈராறு பேர்கள் பெண் சித்தர்கள் என்பதையும் தெரிவித்தார்;அங்கே அன்னதானம் செய்வது மிகவும் கடினம்.ஏனெனில்,எப்போதாவதுதான் நம்மால் அன்னதானம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதியன்று அன்னதானம் செய்துவிட்டு,கிரிவலம் அன்று இரவு சென்றோம்;இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்;கிரிவலம் முடித்தப்பின்னரும்,அன்னதானம் செய்யலாம்;அன்னதானம் செய்தப் பின்னரும் கிரிவலம் செல்லலாம்;எந்தக்கட்டுப்பாடும்,விதிமுறைகளும் கிடையாது;துவாதசி திதி இருபத்து நான்கு மணி நேரம் இருக்கும்;அந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் ஒரு முழு நாளில் மூன்று பொழுதுகள்(காலை,மதியம்,இரவு) வரும் விதமாக அமைய வேண்டும்;அவ்வளவு தான்.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில்,அண்ணாமலையில் அன்னதானம் செய்வதை ஒரு பழக்கமாகவே தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கிறார்கள்;அதனால்,அன்னதானம் செய்வதற்காகவே ரூபாய் ஐந்துக்கும்,பத்துக்கும் உண்டக்கட்டிச் சாதமும் இங்கே கிடைக்கிறது;இதை பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதில்லை;எனவே,மனதார சிறந்த உணவையே அன்னதானமாகச் செய்ய வேண்டும்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதி அன்னதானம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய சில வாரங்களில்,  சுமாராக ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த குடும்பப் பிரச்னை முடிவுக்கு வந்தது;

   மாதம் ரூ.இரண்டாயிரம் வருமானம் வந்தது;  துவாதசி திதி அன்னதானத்தை அண்ணாமலையில் முறையாகச் செய்தப் பிறகு, இப்போது வாரம் ஆயிரம் ரூபாய் வருமானம் வரத் துவங்கியது;நான் கடன் வாங்கியவர்களின் பட்டியல் ஒரு கட்டுக்குள் வரத் துவங்கியது;அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் கடன்களை முழுமையாக அடைத்துவிட்டேன்;எனது நீண்டகால மன உளைச்சல்கள் காணாமல் போயிருந்தன;








நாம் வாழும் காலமோ கலிகாலம்;பணம் அல்லது அதிகாரம் அல்லது காமம் அல்லது அகங்காரம் இவைகளில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளே நம் ஒவ்வொருவரையும் இயக்கி வருகின்றன.இந்த இயக்கத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு,ஆன்மீகமயமான பாதுகாப்புடன் முடிந்தவரையிலும் நியாயமாக சம்பாதிக்கவே இந்த ஆன்மீக ஆராய்ச்சிக் கட்டுரையை தங்களுக்கு வழங்குகிறேன்.




No comments:

Post a Comment