Tuesday, August 30, 2016

சதுரகியின் இன்றைய நிலையை அன்றே சொன்ன அகத்தியர்அய்யா

பேராசைக்காரர்கள், தீயவர்கள் கைகளில் இவை சேர்ந்திடக் கூடாது என பொதுவகைப் படுத்திக் கூறியிருந்தாலும் இதன் பின்னே ஆழமான வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக் கூடும். தங்களை அங்கீகரிக்காதவர்களிடம் தங்களின் தெளிவுகள் சேர்ந்திடக் கூடாது என்கிற தன்மையாகக் கூட இருக்கலாம். சதுரகிரி மலையில் இருக்கும் அற்புத மூலிகை வளங்களைப் பற்றி தங்கள் பாடல்களில் உரைத்திருக்கும் அதே வேளையில் எதிர் காலத்தில் இந்த மூலிகைகளைத் தேடி ஆட்கள் வருவார்கள் என்பதை உணர்ந்திருந்தார்கள். இதற்கு சான்றாய் அகத்தியரின் பாடல்கள் இரண்டினை இங்கே பகிர விரும்புகிறேன்.
அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்கிற நூலில் தனது மாணவரான புலத்த்தியருக்கு கூறுவதாக வரும் பாடல் வருமாறு..
"சித்தான சித்துமுனி சொரூபரப்பா
யின்னமுண்டு உரைப்போம் கேளு
முத்தான புலத்தியனே முடிமன்னா
மூவுலகில் என்றுமுண்டு சித்தர்வர்க்கம்
வெத்தியுள்ள சதுரகிரி வடபாகத்தில்
என்றுமிருப்பார் ரனேகம்பேர் நாதர்தாமும்
பத்தியுடன் நாதாக்கள் தன்னைக்காண
பாருலகில் வெகுமாண்பர் போவார்பாரே"
- அகத்தியர் -
"போவாரே அம்மலையின் அதிசயங்கள்
கோடான கோடிமூலி யனேகமுண்ண்டே
யனைத்தையுமேய ழித்திடவே முனைவர்
மானமுடன் வையகத்தில் மூலிவாழ
நலமுடனே வெகுகாலம் காக்கவேண்டி
நலமுடனே வெகுகால மிருந்துகொண்டு
கோடியாம் மாண்பருக்கு கண்ணில்காணா
குணமுடனே மறைத்தார்கள் நாதாக்கள்தானே"
- அகத்தியர் -
சித்த புருஷர்கள் அழிவில்லாதவர்கள், நிலையானவர்கள் அத்தகைய பெருமக்கள் பெருமையான சதுரகிரி மலையின் வட பாகத்தில் அவர்கள் என்றும் இருப்பார்கள். இவர்களை தரிசித்து அருள் பெற மக்கள் சதுரகிரிக்கு அதிகமாய் வரத் துவங்குவார்கள். அப்படிச் வரக் கூடிய மனிதர்கள் மலையில் இருக்கும் அதிசயமான இடங்களையும், அரிய மூலிகைகளையும் அழிக்கத் தலைப்படுவர் என்று கூறுகிறார்.
மக்கள் எத்தனை பேர் வந்து அழிக்க நினைத்தாலும், சித்தர்கள் இந்த பூவுலகின் நன்மையை கருத்தில் கொண்டு அரிய மூலிகைகளை இன்றும் இவர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வைத்திருக்கின்றனர் என்கிறார். பாதுகாக்கும் அளவை மீறிய ஒரு சில மூலிகைகள் மட்டுமே மக்களின் பார்வையில் கிடைக்குமென்றும். மறைத்து வைக்கப் பட்டிருக்கும் மூலிகைகளை மக்கள் அணுக முடியாத இடங்களில் பத்திரமாக இருப்பதாயும் சொல்கிறார்.
இன்றைக்கு சதுரகிரியில் அகத்தியர் கூறிய நிலமைதான் நிதர்சனமாகி இருக்கிறது.பெருமளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ளதன் விளைவாய் காடுகள் அழிக்கப் பட்டு,அரிய பல மூலிகைச் செல்வங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.எனினும் அகத்தியர் தன் நூலில் அருளியுள்ள படி ஆய்வுகள் மேற்கொண்டால் மறைந்திருக்கும் மூலிகைகளைப் பற்றி அறிய இயலுமென்றே கருதுகிறேன்

No comments:

Post a Comment