Thursday, November 9, 2017

ஸ்ரீபாலா என்ற ஸ்ரீபால திரிபுர சுந்தரி


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் ஈசன் என்ற ஆதிசிவனின் பெயரில் நிர்வாகித்து வருபவர் மஹாகால பைரவப் பெருமான்;இவரது இன்னொரு பெயர் காலதேவன்!


இவர்கள் அனைவரையும் இயக்குவது ஸ்ரீபால திரிபுர சுந்தரி;8 வயதுச் சிறுமியின் வடிவில் இருக்கும் இவளை முறைப்படி தரிசனம் செய்ய வேண்டுமானால் பல பிறவிகள் முயற்சி செய்ய வேண்டும்;


அதில் ஒன்றுதான் ஸ்ரீவித்யா உபாசனை!

ஸ்ரீவித்யா உபாசனையில் முதல்படி:அஷ்ட கணபதி மந்திரத்தை ஸித்தி செய்வது;அஷ்ட கணபதி மந்திரத்தை 3,00,000 முறை ஜபித்து ஸித்தி செய்ய வேண்டும்;

அதன் பிறகு,ஸ்ரீராஜாமாதங்கி அம்மன் தரிசனத்திற்கு முயற்சி செய்ய வேண்டும்;இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை ஸ்ரீராஜாமாதங்கி மந்திரம் ஜபித்து வரவேண்டும்;சாதாரண மனிதர்களால் இதுவரை முயற்சித்து வெற்றி பெற முடியும்;ஸ்ரீராஜாமாதங்கி அன்னை மஹாவராஹியின் அங்க தேவதை!


முந்தைய மூன்று பிறவிகளில் சித்தர் ஒருவரின் சீடராக இருந்திருந்தாலோ அல்லது முந்தைய மூன்று பிறவிகளில் மஹாகால பைரவப் பெருமானை மட்டும் துதித்து இருந்தாலோ மட்டுமே இப்பிறவியில் அன்னை மஹாவராகியை தினமும் ஜபிக்கும் பாக்கியம் கிட்டும்;


ஆமாம்!

அன்னை மஹாவராகியானவள்,ஸ்ரீபால திரிபுரசுந்தரியின் அங்க தேவதை ஆவாள்;மேலும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதி ஆவாள்;

அன்னை மஹாவராகியின் அருளைப் பெறுவது சுலபம்;அப்படிப் பெற்ற அருளை தக்க வைப்பது கடினம்;காமத்தை வெற்றிபெற்றுவிட்டால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்;

பல கோடியுகங்களாக பல ஆயிரம் கோடி மனிதர்கள் அன்னை மஹாவராகியின் அருளைப் பெற்றுவிட்டாலும்,சுயக் கட்டுப்பாடு இல்லாததால் அடுத்த நிலையான ஸ்ரீ பால திரிபுர சுந்தரியின் அருளைப் பெற முடியாமல் தவிக்கின்றார்கள்;

அணு அளவிற்கு காம எண்ணம் இருந்தாலும் மஹாவராகியின் தரிசனம் நமக்குக் கிட்டாது;ஏதாவது ஒரு விடாமுயற்சி மற்றும் பூர்வ புண்ணியத்தினால் ஸ்ரீபால திரிபுர சுந்தரியை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்;அப்போது அவள் மீதே மோகம் வந்துவிட்டால் கடுமையான தண்டனையை அப்போதே தந்துவிடுவாள்;மிக மிக மிக அழகான தோற்றம் இவளுக்கு இருக்கின்றது;

காமத்தைக் கட்டுப்படுத்தவே மஹாவராகியின் ஒரு அவதாரமான அஸ்வாரூடா வராகியை உபாசனை செய்து அவளின் அருளைப் பெற வேண்டும்;இவளின் அருள் கிட்டிவிட்டால் மன அடக்கம்,இந்திரிய அடக்கம் உண்டாகும்;இவளின் வழிபாட்டு முறை பரம ரகசியமாகவே இருக்கின்றது;

நாம் பூமியில் வாழ்ந்து வருகின்றோம்;நமது சூரிய குடும்பம் பால்வழித்திரள் என்ற கேலக்ஸியில் இருக்கும் ஒரு சிறு துகள் ஆகும்;இதன் அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்!

ஒளியின் வேகம் விநாடிக்கு 3,00,000 கி.மீ.தூரம் பயணிக்கின்றது;இதே வேகத்தில் ஒரு ஆண்டுக்கு பயணிக்கும் தூரம் 9,00,000 கோடி கி மீ தூரம் ஆகும்;இப்படி ஒரு லட்சம் ஆண்டுகள் பயணித்தால் பால்வழித்திரளின் ஒரு முனையில் இருந்து மறுமுனையை அடைந்துவிடலாம்;இதே போல பல கோடி கேலக்ஸிகள் இருக்கின்றன;இவை அனைத்தும் சேர்ந்ததே ப்ரபஞ்சம்! இந்த ப்ரபஞ்சத்தை விடவும் மிகப் பெரியதாக இருப்பதுதான் ஸ்ரீசக்கரம்!


அப்பேர்ப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மையத்தில் வீற்றிருப்பவள் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி;இவளின் தரிசனம் பெறுவதற்கு முன் ஸ்ரீபால திரிபுர சுந்தரியின் அருளைப் பெற வேண்டும்;

ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸருக்கு காளி தேவியின் அருளைப் பெற வேண்டி தீவிரமாக இருந்தார்;அதனால் அவருக்கு அவரது பெண் குருவாகிய பைரவப் பிராம்மணி ஸ்ரீபாலா வழிபாட்டு முறையை உபதேசித்தார்;ஸ்ரீபால திரிபுர சுந்தரியை முறையாக வழிபட்டு அவளின் அருளைப் பெற்ற பின்னரே அவருக்கு தட்சிண காளி தேவியின் தரிசனம் கிட்டியது;


தட்சிண காளி உபாசனை மிகவும் கடினமானது;உபாசனையில் சிறு தவறு ஏற்பட்டாலும் பல பிறவிகளாக படாத பாடு பட வேண்டும்;அண்ணாமலையில் அருணகிரிநாதருடன் வம்பு செய்த சம்பாந்தாண்டான் 80 கோடி ஆண்டுகள் பெரு முயற்சி செய்து தட்சிண காளியின் அருளைப் பெற்றான்;ஆனால்,அவளின் அருளைப் பெற்ற பின்னர் அதை தவறாகப் பயன்படுத்தி தனக்குத் தானே அழிவைத் தேடி கொண்டான்;



ஓம் சத்குரு ஸ்ரீவேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment