Thursday, November 30, 2017

செல்வச் செழிப்பைத் தரும் சொர்ண ஆகர்ஷண வராகி!!!


உலகில் மனிதனாகப் பிறந்தது முதல் வாழ்நாளின் இறுதிமூச்சு வரையிலும் பணம் தேவைப்படுகின்றது;உலகமயமாக்கல் நமது நாட்டினை ஆக்கிரமித்தப் பின்னர்,ஒவ்வொரு நாளையும் ஓட்டவே அதிகமான அளவில் பணம் தேவைப்படுகின்றது;


நமக்கு வரும் வருமானத்திற்கு காரணம் யார் தெரியுமா? நாம் மட்டுமே! போன ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியச் செயல்கள்,தானங்களைப் பொறுத்து இப்பிறவியில் நமக்கு இப்பிறவியில் இவ்வளவு வருமானம் கிடைத்துக்  கொண்டிருக்கின்றது;


இதை நமது பக்தி முயற்சியால் அதிகப்படுத்த முடியும்;அப்படி அதிகப்படுத்தும் பலவிதமான வழிமுறைகளை ஜோதிட அறிவியல் தெரிவிக்கின்றது;


இந்த தெய்வீக முயற்சியில் ஈடுபடும் போது,கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;நிரந்தரமாக நிறுத்தியிருந்தால் இரு மடங்கு பலன் கிட்டும்;மது,போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதை கைவிட்டிருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,தாமதப் பலன் கிட்டும்;அல்லது மறுபிறவியில் பலன் கிட்டலாம்;


ஜீவகாருண்யம் என்றால் முட்டை,புரோட்டா உள்ளிட்ட அசைவ உணவு சாப்பிடுவதைக் கைவிட்டிருப்பதுதான்;


பூசம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளன்று குபேரனை பூஜித்தால் நமது வருமானம் அதிகரிக்கும் என்பது ஒரு ஜோதிட ரகசியம் ஆகும்;கடந்த 40,50 ஆண்டுகளாக இப்படி பூஜித்து செல்வச் செழிப்பை அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள்;


சர்வேஸ்வரன் என்ற சதாசிவனின் ஓர் அவதாரம் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;இவர் புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் பொன்பேத்தி      என்ற ஊரில் இருக்கும்  பவானீஸ்வரர்   சிவாலயத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஈசனின் அருளால் உதயமானார்;மஹாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தைக் கொடுத்தவர் இவரே!!!

64 சதுர்யுகங்களாக அம்பாளை பலகோடி பிறவிகளாக எண்ணி வழிபட்டு வந்தால் நம் ஒவ்வொருவராலும் குபேரன் என்ற பதவியை பொறுப்பு வகிக்க முடியும்;


தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாள் அன்று கால பைரவப் பெருமானை ஜபித்தால்/அவரது அபிஷேகத்தில் கலந்து கொன்டால் நமது கர்மவினைகள்,பாவச் சுமைகள் கரையும்;இதனால்,அடுத்த ஒரு மாதம் வரை மன நிம்மதி அதிகரிக்கும்;


    ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை முறைப்படி வழிபட்டால் நமது கர்மவினைகள் நீங்கும்;கர்மவினைகள் குறையத் துவங்கிய மறுநாளே நமதுவருமானம் அதிகரிப்பதை இன்றும் பலர் உணர்ந்துவருகின்றார்கள்;பல பிறவிகளாக பைரவப் பெருமானைச் சரணடைந்தவர்களுக்கு இவ்வாறு வழிபட்ட சில மணித்துளிகளில் வருமானம் வரத் துவங்கி இருக்கின்றது;


இதே போல     ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள்;இன்று வரை இந்த அன்னையின் வழபாட்டு முறையும்,ஜபமுறைகளும் பரம ரகசியமாகவே இருந்து வருகின்றது;


பைரவப் பெருமானை தினமும் ஜபிப்பவர்களுக்கும்,அன்னை வராகி ஜப முறையும்;அன்னை பஞ்சமி தேவி(வராகி)யை தினமும் துதிப்பவர்களுக்கு பைரவ வழிபாட்டுமுறையும் தேடி வரும் என்பது சித்தர் பெருமக்களின் உபதேச ரகசியம்!!!

ஒருவரே பைரவரையும்,வராகியையும் தினமும் ஜபிக்கலாம்;துதிக்கலாம்;வழிபட்டுவரலாம்;

7.12.2017 வியாழக்கிழமை அன்று பூசம் நட்சத்திரம் நள்ளிரவு 1.49 வரை இருக்கின்றது;


இந்த நாளில் பகல் பொழுதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை ஜபிக்கலாம்;துர்கை சித்தர் ஐயா அவர்கள் இயற்றிய ஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபிக்க வேண்டும்;


இரவு 7 மணிக்கு மேல் நள்ளிரவு 1.49 க்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண வராகியை தகுந்த குரு உபதேசம் பெற்று ஜபிக்கலாம்;

பூசமும் வியாழக்கிழமையும் வரும் நாட்கள்:

4.1.2018 வியாழக்கிழமை காலை 9.52 வரை பூசம் நட்சத்திரம் வர இருக்கின்றது;

6.9.2018 வியாழக்கிழமை மதியம் 1.17 க்கு பூசம் நட்சத்திரம் உதயமாகி மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11.38 வரை இருக்கின்றது;
4.10.2018 வியாழக்கிழமை இரவு 7.42 வரை பூசம் நட்சத்திரம் இருக்கின்றது;

ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;ஒரு மண் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்திகள் மூன்றை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு செம்புக் கலயத்தில் சிறிது தண்ணீர் அல்லது இளநீர் நிரப்பி வைக்க வேண்டும்;


தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.


ஜபித்து முடித்ததும்,செப்புக்கலயத்தில் இருக்கும் தண்ணீர்/இளநீரை அருந்த வேண்டும்;இப்படி அருந்தினால்,இது வரை நாம் ஜபித்த இப்பாடல் நமது உடலுக்குள் பதிந்துவிடும்;

இப்படி தொடர்ந்து பதிவாகி வந்தால்,நமது கர்மவினைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானால் சிறிது சிறிதாக அழிக்கப்படும்;அப்படி அழிக்கப்பட்ட உடனே நமது வருமானம் நேர்மையான முறையில் அதிகரிக்கத் துவங்கும்;

ஒவ்வொரு நாளும் இப்பாடலை ஜபித்து முடித்ததும்,இப்பாடலை ஈசனின் அருளால் நமக்கு வழங்கிய உபாசனை குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கை சித்தர் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்;





ஓம் சத்குரு ஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்


No comments:

Post a Comment