Thursday, November 9, 2017

மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெறும் எளிய முறை!


உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நவக்கிரகங்களே காரணம்.அதே சமயம்,நவக்கிரகங்களால் தமது இஷ்டப்படி உங்களை ஆட்டிப் படைக்கவும் முடியாது; நீங்கள் போன ஐந்து பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே இப்பிறவியில் நன்மைகளையும்,தீமைகளையும் வழங்க முடியும்;


நவக்கிரகங்கள் கால தேவன் என்ற மஹாகாலபைரவப் பெருமானுக்கு கட்டுப்பட்டவை;மஹா கால பைரவப் பெருமானோ ஈசனாகிய சிவபெருமானின் அவதாரங்களில் முக்கியமானவர்;இவரின் அருளைப் பெறுவது சுலபம்;இவரது தரிசனம் பெறுவதும் சுலபம்;


இவரை உபாசனை செய்வது கடினம்;ஷீர்டி சாய்பாபா,கன்னியகுமரியில் பல காலம் வாழ்ந்த மாயம்மா,விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்து அண்ணாமலையைச் சரணடைந்த ரமண மகரிஷி போன்றவர்களுக்கே மஹா கால பைரவ உபாசனை மிகவும் கடினம் என்பதை அறிந்திருந்தார்கள்;எனவே,அவர்கள் மிகவும் சுலபமான ஒரு வழிமுறையை நமக்கு உபதேசம் செய்தார்கள்;
தினமும் பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்களுக்கு உணவு தருவது;ஆமாம்!


கோவில் வாசலில் இருக்கும் நாய்களுக்கு உணவு இட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;நமது தெருவில் நாம் பார்க்கும் நாய்களுக்கு தினமும் பிஸ்கட்,பொறை போன்றவைகளை தானமாக கொடுத்து வர வேண்டும்;


மகான்கள் தமது வாழ்நாளில் குறைந்த பட்சம் 40 ஆண்டுகள் வரை ஒரு நாள் கூடவிடாமல் மஹாகால பைரவப்பெருமானின் வாகனமாகிய நாய்களுக்கு உணவு இட்டு வந்தார்கள்;அதன் மூலமாகவே மஹா கால பைரவப்பெருமானின் அருளைப் பெற்றார்கள்;மேலும்,மஹா கால பைரவப் பெருமானின் கருணைக்குப் பாத்திரமாகி,சில பல பைரவ சித்துக்களையும் பெற்றார்கள்;


அண்ணாமலை கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதையில் இருக்கும் நாய்களுக்கு உணவு,பிஸ்கட், பொறை தருவதன் மூலமாக அருணாச்சலேஸ்வரரின் அருளையும்,மஹா கால பைரவப்பெருமானின் ஆசிகளையும் ஒரே சமயத்தில் பெறலாம்;முழுக்க முழுக்க கறுப்பாக இருக்கும் நாய்க்கு கறுத்த பைரீ என்று பெயர்;


வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உணவு இடுவதால் இப்படிப்பட்ட பைரவ அருள் கிட்டாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;எதிர்பாராமல் நாய் மீது வாகனத்தால் ஊனத்தை உண்டாக்கினால் பைரவ சாபம் ஏற்படும்;பிற மதத்தவர் நமது ஆலயத்தை ஆக்கிரமிக்க அனுமதிப்பதாலும்,கோவில் வழிபாட்டு முறைகளை தடுப்பதாலும் பைரவ சாபங்கள் உருவாகும்;கோவில் நடைமுறையினை சீர்குலைத்தாலும் பைரவ சாபம் உண்டாகும்;


ஸ்ரீவாரதாரக சித்தர் என்பவர் பைரவ உலகத்தில் வாழ்ந்து வருகின்றார்;இவர் தான் பல கோடி யுகங்களுக்கு முன்பு இன்றைய ஏழு கிழமைகள்;27 நட்சத்திரங்கள்,12 ராசிகள்,9 கிரகங்கள் என்று காலத்தை வகைப்படுத்தினார்;

இவரை உபாசனை செய்துதான் ஆரியபட்டரும்,பாஸ்கராச்சாரியாரும் காலத்தை கடந்து நிற்கும் ஜோதிட நூல்களான ஆரிய பட்டீயம் போன்றவைகளை எழுதினர்;

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர் பிறை அஷ்டமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வருவதன் மூலமாக ஜோதிட ஞானம் ஜோதிடர்களுக்கு அதிகரிக்கும்;ஒரே நேரத்தில் அண்ணாமலையாரின் அருளும்,மஹாகால பைரவப் பெருமானின் ஆசிகளும்,பைரவ சித்தர்களின் தரிசனங்களும் கிட்டும்;


108 தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்திற்குள் அருணாச்சலத்தை கிரிவலம் சென்று நிறைவு செய்வதன் மூலமாக ஒரு பைரவ சித்தரின் தரிசனம் கிட்டும்;


கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் (அணைக்கரை வழி) சோழபுரம் என்ற இடத்தில் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயமே பூமியில் இருக்கும் அனைத்து கால பைரவர்களுக்கும் தலைமையகம் ஆகும்;பைரவ உலகத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;

64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு இங்கே வருகை தந்து பைரவேஸ்வரியையும்,பைரவேஸ்வரரையும் வழிபட்டு வருவதால் அஷ்டமாசித்திகள் கைகூடும் என்பது சித்தர்கள் வாக்கு!


விரைவான பலன்களை அள்ளித்தரும் கலியுக தெய்வங்கள் மஹாகாலபைரவப் பெருமான்;மஹாவராகி,சரபேஸ்வரர்,சூலினி துர்கை;இவர்களில் முதன்மையானவர் மஹா கால பைரவப் பெருமானே!!!


ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ


ஓம் சத்குரு ஸ்ரீவேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment