Monday, January 30, 2017

ஈசன் அருளை விரைவாகத் தரும் பதிகம்!


திருவாரூர் தியாகராஜப் பெருமானை திருநாவுக்கரசர் இந்த பதிகம் பாடி அருள் பெற்றார்;இந்தப் பதிகத்தில் 108 முறை போற்றி வருவதால்,ஈசனின் அருள் கடாட்சம் நமக்கு விரைவில் கிடைக்கும் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக,பல லட்சம் சிவனடியார்களால் உணர்ந்த அனுபவ உண்மை!

திருச்சிற்றம்பலம்

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லல் அறுத்தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி
கொங்கு அலரும் நறும் கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி
ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக் குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழ விடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றி மேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி
இலை ஆர்ந்த மூவிலை வேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

பொன் இயலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படை உடையாய் போற்றி போற்றி
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி
மறி ஏந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண் பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின் பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி
வெண்மதி அம் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின் பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா நின் பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்பும் அவர்க்கு அரும் பொருளே போற்றி போற்றி
நால் வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர் கோன் தோள் துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

பூ ஆர்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல் கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
பெண் உருவோடாண் உருவாய் நின்றாய் போற்றி
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்
சிரம் நெறித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி

திருச்சிற்றம்பலம்.




No comments:

Post a Comment