Monday, January 11, 2021

ஜன்மச்சனியின் துயரங்கள் நீங்கிட

 


27.12.2020 முதல் 20.12.2023 வரை மகர ராசியை சனிபகவான் கடக்கிறார்இதுவே மகர ராசியினருக்கு ஏழரைச்சனியில் இரண்டாவது பகுதியான ஜன்மச்சனி ஆகும்.இந்த ஜன்மச்சனியின் தாக்கத்தைக் குறைக்க பின்வரும் முறையில் பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.

நவக்கிரகங்களில் சனிக்கிரகத்தின் குருவாக கால பைரவர் இருக்கின்றார்;சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவரும் கால தேவன் என்ற கால பைரவப் பெருமானே!!!


சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் கால பைரவர் சன்னிதியில் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,அதில் பாதி நெய்யும்,பாதி இலுப்பெண்ணெய்யும்,ஒரு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து விளக்கு ஏற்றிட வேண்டும்.அதன்பிறகு பைரவ அஷ்டகம் மனதுக்குள் வாசிக்க வேண்டும்.ஓய்வு நேரமிருப்பவர்கள் பைரவ அஷ்டகத்தை எட்டு முறை வாசிப்பது நன்று.

அதே சமயம்,இந்த மூன்றாண்டுகளும் துலாம் ராசியினர் அசைவம் சாப்பிடக்கூடாது;முட்டை,முட்டை கலந்த பொருட்கள்,புரோட்டா போன்றவைகளையும் சாப்பிடுவது தவறு.

மேலும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்.தரையில் படுத்து தூங்க வேண்டும் .(ஆடம்பரமான படுக்கையில் தூங்கக்கூடாது)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை மழிக்க வேண்டும்.சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கும்,அனாதைகளுக்கும் அன்னதானம் செய்துவரவேண்டும்.எண்ணிக்கை உங்களது பண வசதியைப் பொருத்தது.



 சனிப்பிரதோஷ நாட்களில்        திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அல்லது

வீட்டிலேயே தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வர வேண்டும்; 

இது முடியாதவர்கள் 108 முறையாவது தினமும் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று எழுதி வர வேண்டும்; 

அல்லது

தினமும் தெரு நாய்களுக்கு உணவுப் பொருட்கள் தானம் செய்து வர வேண்டும்; அண்ணாமலை கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதைகளில் இருக்கும் பைரவ வாகனங்களுக்கு தானம் செய்வது மிகுந்த அளவில் புண்ணியத்தையும்,சனிபகவானின் ஆசிகளோடு,பைரவரின் அனுக்கிரகத்தையும் பெற்றுத் தரும்.கூடவே அண்ணாமலையாரின் மன மகிழ்வுடன் கூடிய வரங்களை பெறலாம்;

27.12.2020 முதல் 20.12.2023 வரை மகர ராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனி நடைபெற்று வருவதால் பைரவரின் அருளைப் பெற முயற்சிப்பது அவசியம்;

No comments:

Post a Comment