Sunday, July 15, 2018

வெற்றிமீது ஆசை வைத்தேன்:நமக்கு ஒரு பாடம்




“கொடுக்கல் வாங்கலில் பணம் இல்லாததால் கடைக்கு சரக்கு தர யாரும் முன்வரவில்லை;வாடிக்கையாளர் பலரை இழக்க நேர்ந்தது.இருக்கும் ஒரு சில வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள, எங்கள் கடையில் இல்லாத ஒரு சில பொருட்களைப் பக்கத்தில் கடை வைத்திருந்த அத்தான் கடையில் வாங்கிக் கொடுத்தோம்.அங்கும்கூட கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்வரை கடனாகிவிட்டது.இதனாலும்,எனது வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பால் எங்களுக்கு கடனாகப் பொருட்கள் கொடுப்பதையே நிறுத்தி விட்டார் அத்தான்.

இந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கே கூட அரிசி இல்லாத நிலை ஏற்பட்டது.அப்பொழுது என் மனைவி ஒரு பையனை அத்தான் கடைக்கு அரிசி வாங்க அனுப்பியிருந்தார்.அவரோ,
“பழைய கடனை அடைத்தால்தான் அரிசி தருவேன்” என்று திருப்பி அனுப்பிவிட்டாராம்.

நான் வீட்டிற்குப் போனதும் என்னிடம் இதைச் சொல்லி அழுதாள் என் மனைவி. ‘நமக்கா இந்த நிலைமை’ என்று கூட எனக்கும்கூட கண்ணீர் வந்துவிட்டது.இத்தனைநாள் பட்ட கஷ்டம் பாழாகிவிட்டதோ என்று வருத்தம்.பெரிய அளவில் முன்னேறவேண்டும் என்ற ஆசைப்பட்டு இருக்கிற மளிகைக்கடை வியாபாரத்தையும் கெடுத்துக்கொண்டோமே என்று ஒரே சிந்தனை.
அத்தான் தனது கடையிலிருந்து முப்பது ரூபாய் மதிப்புள்ள பத்துகிலோ அரிசி கூட எங்கள் வீட்டிற்குக் கொடுக்க மறுத்துவிட்டார் என்ற விஷயமே என்னை உறுத்தியது.இப்படியொரு  சொந்தக்காரரே எனக்கு உதவ மறுத்த நிலையில்,சொந்த பந்தத்தின் மீதான பாசம் விட்டுப்போனது”

மளிகைக் கடை வைத்து தோல்வி அடைந்த அந்த வி.ஐ.பி.சாப்பாட்டிற்காக சொந்தக்காரரிடம் அரிசி கடனாகக் கேட்கப்போய், அது கிடைக்காமல், அவமானம் மட்டும் கிடைத்தது.அதன் பலன் அவர் தீவிரமாக சிந்தித்தார்.நம்மிடம் பணம் இல்லாததால்தான் நம்முடைய உறவினர் கூட நம்மை மதிக்கவில்லை;(இந்தக் காலத்தில் பெற்றோரே மதிப்பதில்லை)இந்த நிலையை மாற்றிக்காட்டுவேன்;நானும் கடுமையாக உழைத்து பெரும் பணக்காரராக வாழ்வேன் என்று அந்த வி.ஐ.பி.சபதம் எடுத்துக்கொண்டார்.


கடுமையாக உழைக்கத்துவங்கினார்.மெல்ல அவர் பார்வை ஹோட்டல் பக்கம் திரும்பியது.தெரியாத தொழிலாக இருந்தாலும் துணிந்து இறங்கினார்; கடுமையாக உழைத்தார்;தரமான உணவுப்பொருட்களை மட்டுமே அவரது ஹோட்டலில் விற்பனை செய்யும்படி வைத்தார்.சில புதுமைகளையும் ஹோட்டல் தொழிலில் செய்தார்;படிப்படியாக முன்னேறினார்.ஒரு ஹோட்டல் இரண்டானது;இந்த 25 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட ஹோட்டல்களைத் திறந்துவிட்டார்.அந்த ஹோட்டல்தான் சென்னையில் புகழ்பெற்றுவிளங்கும் சரவணபவன்!!! அந்த வி.ஐ.பி.யின் பெயர் கே.ராஜகோபாலன் !!! சரவணபவன் ராஜகோபாலன் அண்ணாச்சி என்றால் அனைவருக்கும் தெரியும்.

பணம் இல்லாததால் அவருக்கு ஏற்பட்ட அனுபவமே அவரை வாழ்க்கையில் இந்த நிலைக்கு உயர்த்தியது.இன்றைக்கு மிகப்பெரிய கோடீஸ்வரராக சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

$ ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவமானங்கள்,தாழ்வுகள் வரத்தான் செய்யும்;அது வாழ்க்கைச் சக்கரத்தின் செயல்பாடு;நமக்குத் தேவையான நற்கருத்துக்களை யார் தெரிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளப்பழகிக் கொள்ள வேண்டும்;

No comments:

Post a Comment