Thursday, April 27, 2017

கலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தராக மாறிட அறிந்துகொள்ள வேண்டிய வித்தைகளும்!!!





துறந்திட்டார் உலகரென்று சித்தரெல்லாம்
  தோற்றாமல் உருமாற்றிக் கொண்டு போனார்
கறந்திட்டார் மதியமுர்தம் உண்ணவேண்டிக்
  கயிலையிலும் மலைதோறும் சமாதி சார்ந்தார்
 இறந்திட்டார் லோகத்தைச் சேர்ந்தோரெல்லாம்
  இறவாமல் வரைகோடி ஏறினார்கள்
பறந்திட்டார் இதையறிந்து ஞானம் பார்த்துப்
  பதிநில்லு அட்டகர்மப் பாசைகேளே
கருவூரார் பாடல் எண்;175


விளக்கம்: உலக மக்களின் இந் நிலையைக் கண்ட சித்தர்கள் எல்லாம் சூக்கும உடலை எடுத்துக்கொண்டு மதி அமுர்தம் உண்ணுவதற்குக் கயிலாசம் முதல் மலைகளிலும் சமாதி இருந்தார்கள்.உலக மாய்கையில் மூழ்கினவர்கள் இறந்து போனார்கள்.சித்தர்கள் இறக்காமல் மேல்நிலையை அடைந்தார்கள்.

உண்மை நிலையை அறிந்து ஞானத்தைப் பார்த்து ஓர் நிலையாய் நிற்பாயாக! அப்படி ஓர் நிலையாய் நிற்பதற்கு உதவும் அஷ்ட கர்ம வித்தைகளை நீ கற்றுக்கொள்வாயாக!அவைகளின் பெயர்கள்:வசியம்,மோகனம்,தம்பனம்,வித்வேதனம்,பேதனம்,    உச்சாடனம்,ஆகர்ஷணம்,மாரணம்.
நன்றி: கருவூரார் பலதிரட்டு,பக்கம் 79.


ஆன்மீகக் கடலின் கருத்து: கலியுகத்தில் ஜோதிடப்படி நான்கே நான்கு கிரகங்கள் கடுமையாக உழைத்து நம்மை இறைவனருளில்/ஆன்மீகமுயற்சியில்  ஈடுபடாமல் தடுக்கும்.அவை சனி,செவ்வாய்,இராகு,கேது.இருந்தபோதிலும்,யாருக்கு தகுந்த ஆன்மீக குரு அமைகிறார்களோ,அவர்களால் இந்த நவக்கிரகங்களின் செயல்பாடுகளையும் மீறி தம்மை சித்தராக்கிக்  கொள்ள முடியும்.


மேலே கூறப்பட்டுள்ள அஷ்டகர்மங்களையும் ஒரே பிறவியில்(நாம் வாழும் கலியுகத்தில்) தேர்ச்சி பெற முடியாது.ஏதாவது ஒரு கலையில் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.இந்த  அஷ்ட கர்மங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக நாம் சித்தராகலாம்;பணமும் சம்பாதிக்கலாம்;இன்றைக்கு ஜோதிட மாத இதழ்களை வாங்கி பார்த்தால் இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களே உங்களது பிரச்னைகளைத் தீர்க்கிறேன் என்று விளம்பரம் செய்திருப்பார்கள்.

இந்த அஷ்டகர்மாக்களையும் கற்க நமக்குத் தேவையான முதல் தகுதி:பூர்வ புண்ணியம்ஆகும்.இந்த பூர்வ புண்ணியத்தை ஒருவரது பிறந்த ஜாதகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


இரண்டாவது தகுதி:மனத்தைக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியம்.(இந்தத் தகுதியைப் பெற தினமும் ஒரு மணி நேரம் வீதம்  குறைந்தது 3 மூன்று ஆண்டுகளுக்கு சிவாய நம ஜபித்து வருவது);


மூன்றாவது தகுதி: நமது பூர்வ கர்மவினைகளை இந்தப் பிறவியிலேயே கரைத்துவிட வேண்டும்.இது கொஞ்சம் சிக்கலான விஷயம் ஆகும்.இதற்கு குறைந்தது 60 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஏதாவது ஒரு ஸ்ரீசொர்ண பைரவர் சன்னதியில் இராகு காலத்தில் அவரை வழிபாடு செய்திருக்க வேண்டும்.அதுவும் பழமையான சன்னதியாக இருக்க வேண்டும்.


நான்காவது தகுதி: இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.ஏனெனில்,தமிழ்நாட்டில்  பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே!பக்கத்து மாநிலங்கள் அல்லது இந்தியாவில் வேறு மாநிலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட  இப்பேர்ப்பட்ட ஆன்மீகக் கருவூலங்கள் கிடைக்கவில்லை;வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத் தேடல் மிகக் குறைவே!
நாம் தமிழராகப்பிறந்து,சிந்திக்கும் திறன் நமது பருவ வயதில் உருவாகி,இணையம் என்னும் தொழில் நுட்பத்தை புரிந்து, மகாவில்வத்திற்குள் புகுந்ததால் இவ்வ்வளவு தெய்வீக ரகசியம் நம்மைத் தேடி வந்திருக்கிறது.இல்லையா?

No comments:

Post a Comment