Thursday, February 2, 2017

ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய அண்ணாமலையார் அஷ்டகம்!


ஈரேழு பதினாலு உலகங்களிலும் காணப்படும் ஒரே மலை அண்ணாமலை என்ற அருணகிரி என்ற அருணாச்சலம்!

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

அண்ணாமலையை தினமும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்;அப்படி நினைத்துக்கொண்டே இருந்தால்,நமது வாழ்க்கையின் இறுதி நாளில்,இறுதி நேரத்திலும் அண்ணாமலை நினைவுக்கு வரும் என்று அர்த்தம்;அப்படி நினைத்துவிட்டால்,இப்பூமியில் பிறக்காமல் இருக்கும் முக்தி கிடைத்துவிடும் என்று அர்த்தம்;

சரி,எப்படி அண்ணாமலையை நினைத்துக்கொண்டே இருப்பது?
ஒரு வருடத்திற்குள் 12 தடவை(தேய்பிறை சிவராத்திரி என்றால் மிகவும் நன்று) அண்ணாமலை கிரிவலம் சென்றால் நமது நினைவில் நிற்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்;

பிரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக அண்ணாமலை என்ற அருணாச்சலத்தைக் கிரிவலம் வந்தது,பிரபஞ்ச அன்னை பார்வதி தேவியே! அன்னைக்குத் துணையாக நமது தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவருமான நமது தமிழ் இனத் தந்தை அகத்தியர்,நமது அன்னை பார்வதி தேவி உடன் கிரிவலம் வந்தார்;இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர் சுவாமிகள்;இவர் மூலமாக ஸ்ரீலஸ்ரீ வேங்கடரமண சுவாமிகளுக்கு உபதேசமாகக் கிட்டிட,வாத்தியார் சுவாமிகள் என்ற ஸ்ரீலஸ்ரீ வேங்கடரமண சுவாமிகள் மூலமாக நமக்கு கிடைத்திருக்கின்றது;


6.2.2017 திங்கட்கிழமையும்,ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் மலையே ஈசனாக அருள்பாலித்து வரும் அண்ணாமலையார் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது;இதில் பூர்வபுண்ணியம் உள்ளவர்களும்,அருணாச்சலேஸ்வரின் அருளுக்குப் பாத்திரமானவர்களுமே கலந்து கொள்ள முடியும்;


கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் அந்த நாளில் காலை 9 மணிக்குள் ஒருமுறையாவது இந்த அண்ணாமலையார் அஷ்டகத்தை ஜபித்தால் போதுமானது;வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் ஜபிக்க வேண்டும்;இதை ஒரு முறை ஜபித்தால்,அண்ணாமலை கிரிவலம் ஒருமுறை சென்று வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசித்த பாக்கியம் கிட்டும்;


ஓம் துர்கை சித்தர் போற்றி!  போற்றி!!  போற்றி!!!

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்

பொங்கிவரு கங்கையான பொன்னி யானவன்
பொன்னுடனே பொருளளித்த பொதிகை யானவன்
தங்கி நிற்க யிங்கு வந்த தந்தை யானவன்
தவமளித்த இன்பமான தருண னானவன்
சங்கெடுத்து இசையளித்த சதுர னானவன்
சத்தியத்தின் சபையளித்த சடைய னானவன்
நங்கை யுமை அன்னைமகிழ் நம்ப னானவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே          (1)

அழலெடுத்து ஆடுகின்ற அண்ணாமலையானே
அங்குமிங்கு மெங்குமாக அருகில் நின்றவா
நிழலெடுத்து நிறைவுகாட்டி நித்தம் காத்தவா
நின்றுநின்று நினைப்பளித்து நிதியும் தந்தவா
விழலிடத்து முகிலுமாகி விளைவு மானவா
விந்தையான தமிழினோடு விளக்கு மானவா
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (2)

வளங்களோடு வையவாழ்வு வகுத்துத் தந்தவன்
வறுமை தீர பொறுமையோடு வழிகள் தந்தவன்
விளங்கனியில் சுவை மடுத்த விளைவும் தந்தவன்
விண்ணுமண்ணும் ஒன்றுமான வேதம் தந்தவன்
அளங்களெங்கும் நெற்குவித்து அளந்து தந்தவன்
அன்பர்வாழ மண் நடந்து அருளும் தந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (3)

காட்சி தந்து காத்து நிற்கக் கயிலை விட்டவன்
காலமெல்லாம் காவலாகக்  காக்க வந்தவன்
மாட்சிபொங்கக் கொன்றையான மாலை யிட்டவன்
மாதவத்தர் உள்ளம்பாட மயங்கி வந்தவன்
ஆச்சியான காளியோடு ஆட்ட மிட்டவன்
ஆறுமுகன் யானையோடு ஆக்க வந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (4)

செண்டு கொண்ட சாத்தனையும் செகத்திற்க் கீந்தவன்
சென்மபாபம் யாவுந்தீரச் செபமும் சொன்னவன்
கண்டுகொள்ள வந்தபேர்க்குக் கண்கள் ஈந்தவன்
கவலைதீரக் கடுமை போகக்கவிதை சொன்னவன்
தண்டெடுத்துத் தொல்லையோட்டி தண்மை ஈந்தவன்
தயவுசெய்து தலங்கள் தோறும் தங்கி நின்றவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (5)

மறைகளான தமிழில் பாட மகிழ்வு கொண்டவன்
மங்கலத்து வாழ்வு ஆன மன்னர் மன்னவன்
நிறைவு கொண்டு கோயில்தங்க நெஞ்சம் கொண்டவன்
நியமமான நந்திமகிழ நிருத்தம் செய்தவன்
இறைவனென்ற பெயருக்கேற்ற இனிமை கொண்டவன்
இன்றுபோல என்றுமென்றும் இளமை யானவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (6)

அரவெடுத்துக் கங்கணமாய் அணிந்து பார்த்தவன்
அய்யனாகி அண்ணாமலை அமர்ந்து பார்த்தவன்
துறவுபோன்ற வறுமை நோயைத் துடைத்துப் பார்த்தவன்
துதிக்கை கொண்ட தும்பி தோலைத் துணித்துப் பார்த்தவன்
உறவு கொண்டு நஞ்சையுண்டு உலகைப் பார்த்தவன்
உமையாள் பாட மதியைச் சூடி நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (7)

பூதநாதன் வேத நாதன் பூமிநாதனே
பூழிசூடி புன்மைதீர்த்த பூவை பாகனே
தாதனாகித் தாபம்போக்கு தாயு நாதனே
தாரகத்தின் பொருள்மடுத்த தாணு நாதனே
நாதநாத நாதநாத நாத நாதனே
நாதமோடு நாடுபாடு நாக நாதனே
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (8)

ஓம் அருணாச்சலாய நமஹ

(ஒருமுறை அண்ணாமலை என்று கூறினாலோ அல்லது அருணாச்சலம் என்று சொன்னாலோ 3,00,00,000 முறை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம்=அருணாச்சல புராணம்)

No comments:

Post a Comment