Tuesday, March 1, 2016

ஸ்ரீலஸ்ரீதுர்கைச்சித்தர் அருளியிருக்கும் ரோக நிவாரண அஷ்டகம்!


நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இணையமும்,அலைபேசியும் பரவலாகியப் பின்னர் மனதில் இருக்கும் பக்தியும் வற்றிவிட்டது;விசுவாசமான சீடன் கிடைத்தாலும்,அவனைச் சீராட்டும் தன்னலம் கருதாத குருதத்துவம் பொருந்திய குரு அமைவது அரிதிலும் அரிதாகிவிட்டது;எங்கும் எதிலும் பணமே ஆட்சிபுரிகின்றது;

இந்நிலையில் கோடிக்கணக்கான அப்பாவி+ நேர்மையான மக்களுக்கு பக்தியும்,பக்திப் பாடலைப் பாடுவதுமே சிறந்த குருவாக அமைந்துவருகின்றது;

மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக தினமும் அன்னை ஆதி வராகியை வழிபடுதல்;
மாதம் ஒருமுறை அண்ணாமலைக்குப் பயணித்தல்;
மாதம் ஒருமுறை உள்ளூரில் இருக்கும் சிவாலயத்தில் அன்னதானம் செய்தல்;(வசதியும் மனமும் உள்ளவர்கள் தினமும் அன்னதானம் செய்யலாம்!
ஒரு மஹாவில்வம் கன்று மற்றும் சில தெய்வீகக் கன்றுகள் நட்டு தினமும் பராமரித்தல்
மாதம் ஒருமுறை கண்டிப்பாக குலதெய்வ வழிபாட்டை,குலதெய்வம் கோவிலுக்குச் சென்று பின்பற்றுதல்
இவைகளை முறையாகச் செய்தாலே போதும்;இப்பிறவி முழுவதும் நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்;ஜெயிக்கலாம்;


தாம்பரம் அருகில் அமைந்திருக்கும் கிராமம் படப்பை;இங்கே அருள்மிகு ஜெயதுர்கா பீடத்தை அமைத்து பக்தியைப் பரப்பிக் கொண்டிருந்தவர்தான் அருள் நிறைச் செல்வர் ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர்;இவருக்கு உபாசனா குலபதி என்ற பட்டம் உண்டு;இவரது எழுத்துக்களில் இவரது ஆன்மீக அனுபவங்கள் அப்படியே நிரம்பியிருக்கின்றன;நேரில் இருந்து நமக்கு வழிகாட்டுவது போலவே இருக்கின்றன;அவரது நூல்கள் மூலமாக நமக்கு மானசீக குருவாக இருந்து நம்மை வழிநடத்தி வருபவர்;அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்;

பகவதி தேவி பர்வத தேவி
   பலமிகு தேவி துர்க் கையளே
ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
   சங்கரி யுன்னைப் பாடி டுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
   தளிர்ந்திடுஜோதி யான வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா! (1)

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
   கட்கினி தேவி துர்க் கையளே
தந்தன தான தனதன தான
   தாண்டவ நடன ஈஸ்வரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
   முனிவர்கள் தேவி மணித் தீவி
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(2)

காளினி நீயே காமினி நீயே
   கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி
   நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
   மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா(3)

நாரணி மாயே நான்முகன் தாயே
   நாகினி யாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுறை தாயே
   ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
   கானக யாயே காசி னியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
  தாபநிவாரணி ஜெய துர்க்கா!(4)

திருமகளானாய் கலைமகளானாய்
   மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதி யானாய் பேரறி வானாய்
   பெருவலி வானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய்
   நந்தினி யானாய் நங்கை யளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(5)

வேதமும் நீயே வேதியள் நீயே
   வேகமும் நீயே துர்க் கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
   நாணமும் நீயே நாய கியே
மாதமும் நீயே மாதவம் நீயே
   மானமும் நீயே மாய வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாபநிவாரணி ஜெய துர்க்கா!(6)

கோவுறை ஜோதி கோமள ஜோதி
   கோமதி ஜோதி துர்க் கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
   நாட்டிய ஜோதி நாச்சி யளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
   பூதநற் ஜோதி பூரணையே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(7)


ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம
  சாரிணி சந்த்ர கண்டி னியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
  மாதினி காத்யா யன்ய யளே
ஜெய ஜெய கால ராத்திரி கெளரி
  ஸித்திதா ஸ்ரீநவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
  தாப நிவாரணி ஜெய துர்க்கா!(8)

நீண்டகாலமாக நோய் அல்லது கடன் இவைகள் உள்ளவர்கள் தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் இந்தப் பாடலை பாடிவருவது அவசியம்;

அவரவர் பூர்வபுண்ணிய வினைக்கு ஏற்ப ஒராண்டு முதல் மூன்றாண்டு வரைப் பாடி வர கடன் தீரும்;நோய் விலகும்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!



No comments:

Post a Comment