Thursday, February 21, 2013

சனிப்பிரதோஷத்தன்று சிவாய நம ஜபிப்போம்;விரைவான சிவகடாட்சத்தைப் பெறுவோம்!!





22.2.13 மற்றும்  9.3.13 என இரண்டு சனிப்பிரதோஷ நாட்கள் அருகில் வர இருக்கின்றன.நம்மைப் படைத்த சக்தியை வழிபடுவது நமது கடமைகளில் ஒன்று.அதுவும் அவரது திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள் அல்லது நட்சத்திரம் வரும் நாளில் வழிபட,நமது கடுமையான கஷ்டங்கள் நீங்கிவிடும் என்பது பல கோடி ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள சிவவாக்கின்படி,ஒரு சனிப்பிரதோஷ தினத்தன்று நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயம் சென்று சிவவழிபாடு தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும்.ஏனெனில்,இந்தப் பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் ஒரு சனிக்கிழமையன்றுதான் நிகழ்ந்தது.


இந்த நன்னாளில் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை நான்கு மணிக்குள் சென்று கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் மஞ்சள் துண்டு விரித்தவாறு நந்தி பகவானை தரிசிக்கும் விதமாக அமர்ந்து கொள்ள வேண்டும்;மாலை ஆறு மணி ஆகும் வரை மனதுக்குள் சிவாய நம ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;இந்த சனிப்பிரதோஷ நாளில்,பிரதோஷ நேரத்தில் இவ்வாறு தொடர்ந்து சிவாய நம ஜபிப்பதற்கே பூர்வபுண்ணியம் வேண்டும்.

இதைச் செய்ய இயலாதவர்கள் தமது வீடு/அலுவலத்தில் அவரவர் இருக்கையில் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;முடிந்தால் அண்ணாமலை போன்ற ஆலயங்களுக்கு சென்று ஜபிக்கலாம்;வெகுநாட்களாக தினமும் சிவாய நம ஜபித்து வருபவர்கள் இந்த நாளில் கோவிலுக்குச் செல்ல இயலாவிட்டால்,இந்த நேரத்தில் நமது இருப்பிடத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக நாம் விரும்பும் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்;அங்கே நந்தியை மானசீகமாக தரிசித்தவாறே மனதுக்குள் சிவாய நம ஜபித்துவர வேண்டும்.இது எல்லோராலும் இயலாத காரியமே.இருப்பினும்,இவ்வாறு தொடர்ந்து பிரதோஷ நேரம் முழுவதும் ஜபித்தால் சிவதரிசனத்தோடு,நந்தி தரிசனமும் வேறுசில சித்தர்கள் தரிசனமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.                                மாலை ஆறு மணிக்கு மேல் கொஞ்சம் இளநீர் அல்லது தண்ணீர் அருந்தினால்,அது  வரை நாம் ஜபித்த சிவாய நம நமது உடலுக்குள் பதிவாகிவிடும் என்பதை நமது ஆன்மீககுரு தனது அனுபவத்தை போதித்திருக்கிறார்.
அண்ணாமலைக்குச் செல்வோர் சனிப்பிரதோஷம் நிறைவடைந்ததும்,கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு ஆகும்.


இதே சனிப்பிரதோஷ நேரத்தில் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் சிவாய நம ஜபிக்கலாம்.அந்த ஜீவசமாதியினுள் உறைந்திருக்கும் மகானின் அருட்பார்வை வெகு விரைவில் கிட்டும்.

சிவாய நம

1 comment:

  1. சுரேஷ் குமார், வேங்கைவாசல்.

    சனிபிரதோஷ மகிமயை விரிவாக தெரிவித்தமைக்கு ந்ன்றி.

    ReplyDelete