Tuesday, January 1, 2019

கர்மவினைகளை கரைத்து சர்வ சுபிட்சம் தரும் துவாதசி அன்னதானம் 2019 டூ 2020!!!



நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கவே இங்கே,இந்த பூமியில் பிறவி எடுத்துள்ளோம்;ஆனாலும்,பரமேஸ்வரன் கருணை மிக்கவன்;திருந்த வேண்டும்;மனம் வருந்தவேண்டும் என்று தவியாய் தவிக்கும் உள்ளங்களுக்கு பரிகாரம்,வழிபாடு,ஜபம்,தானம்,பதிகம் பாடுதல்,வாசியோகம் போன்றவைகள் மூலமாக கர்மவினைகளை அனுபவிக்காமல் குறைத்து நிம்மதியாக வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளான்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,காலத்தை வரையறுத்துத் தந்த பைரவ சித்தர் ஸ்ரீவாரதாரகர் சித்தருக்கு நன்றிகள் தெரிவித்துவிட்டு,துவாதசி திதியின் பெருமைகளை அறிந்து கொள்வோம்;இவர்தான் 12 ராசிகளையும்,27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வரையறுத்துள்ளார்;

மஹா கால பைரவ உலகம் என்று ஒரு உலகம் இருக்கின்றது;இந்த உலகத்தில் வசித்துவரும் இவர் தான்,கால தேவனாகிய மஹா கால பைரவப் பெருமானின் அருளால் நமக்கு ஜோதிடத்தின் அடிப்படையான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,ராசிகளை பிரபஞ்ச வரலாற்றில் போதித்தார்;

இவர் வருடத்தின் சில குறிப்பிட்ட  அண்ணாமலை கிரிவலம் வருகின்றார்;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி நேரம் முழுவதும் அண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றார்; கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி நேரத்தில் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழாபுரம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று முறைப்படி பூஜைகள் செய்கின்றார்;எல்லா பைரவ சித்தர்களும் இம்முறைப்படி வழிபட்டு பைரவப் பெருமானின் அருட் கடாட்சத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்;

ஒவ்வொரு மாதமும் இரண்டு துவாதசி திதிகள் வருகின்றன;இந்துக் காலக் கணக்கின்படி,ஒரு சூரிய உதயத்தில் இருந்து அடுத்த சூரிய உதயம் வரை இருக்கும் கால அளவுதான் ஒரு நாள் ஆகும்;பெரும்பாலான துவாதசி திதிகள் ஒரு நாள் மதியம் துவங்கி மறு நாள் மதியம் அல்லது மாலை வரை வருவதால் அந்த திதி நாட்களை இங்கே குறிப்பிடவில்லை;முழுத் துவாதசி திதி வரும் நாட்களை மட்டுமே பஞ்சாங்கத்தின் துணை கொண்டு அண்ணாமலையாரின் ஆசிகளோடு இங்கே வெளியிடுகின்றோம்;


துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும்;மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர்,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;


இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்;கிரிவலப் பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்களும்,அனைத்து தெய்வங்களும் உறையும் பசுக்களும் இருக்கின்றன;அக்னிலிங்கம் வரை பசுக்கள் அதிகமாக தென்படுகின்றன;எனவே,கிரிவலம் புறப்படும் போது போதுமான அளவுக்கு அகத்திக்கீரைகள் மற்றும் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்;கிரிவலப்பாதையில் தென்படும் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளையும்,வாழைப்பழங்களையும் தானமாக தர வேண்டும்;நிறைய பிஸ்கட்கள்,பொறைகளை வாங்கிக் கொண்டு செல்வதால் கிரிவலப் பாதை தூரமான 14 கி மீ அளவுக்கு வழியில் தென்படும் பைரவ வாகனத்திற்கு தானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக ஒரே சமயத்தில் பைரவரின் அருளும்,அருணாச்சலேஸ்வரின் ஆசிகளும் நமக்கு கிட்டும்;

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்;இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்;

அதன் பிறகு,ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்;மூலஸ்தானத்தை நெருங்கும் போது,(நடராஜர் சன்னதியை பார்க்கும் போது) இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்;வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது;


அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்;அதன் பிறகே,மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும்;பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்;இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அதன் பிறகு,கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு,மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்;இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும்,கிரிவலமும் நிறைவடைகின்றது; இந்த வழிபாட்டுமுறையை நமக்கு போதித்த சத்குரு ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுக்கு நன்றிகளை இக்கணத்தில் தெரிவிப்பது நமது கடமை ஆகும்;இந்த சத்குருவானவர் சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய ஸ்ரீஅகத்தியர் அவர்களின் வம்சாவழியில் உதித்த நமது சத்குரு ஆவார்;


நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது;

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;


சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;
இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்;வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்;

இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்;இரவில் அல்லது மதியம் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்;

இதைச் செய்ய விரும்பி,ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;


 விளம்பி & விகாரி வருடத்திற்கான முழுத் துவாதசி திதி நாட்கள்;



2.1.2019 புதன் 

1.2.2019 வெள்ளி

16.2.2019 சனி

16.4.2019 செவ்வாய்


1.5.2019 புதன்

29.6.2019 சனி

13.7.2019 சனி

27.8.2019 செவ்வாய்

10.9.2019 செவ்வாய்

10.10.2019 வியாழன்

23.11.2019 சனி

7.1.2020 சனி

21.1.2020 செவ்வாய்

7.3.2020 வெள்ளி



மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;

முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்;தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;



தமது சீவனுக்குள் இருக்கும் சிவனை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற தவிப்பில் வாழ்ந்து வருபவர்களும் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

ஓம் அகத்தீசாய நமஹ


ஓம் அருணாச்சலாய நமஹ



No comments:

Post a Comment