Friday, April 13, 2018

வாராஹி ஜபம் பற்றிய அடிப்படை விளக்கங்கள்


ஏன் வாராஹி ஜபம் தினமும் செய்ய வேண்டும்?

ஏனென்றால்,நாம் வேலைக்குச் சென்று கொண்டு இருந்தாலும் சரி;சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருந்தாலும் சரி;அரசுப் பணியில் இருந்தாலும் சரி;அரசியலில் இருந்தாலும் சரி;நமக்கு என்று போட்டியாளர்கள் இருக்கின்றார்கள்;

சரி; போட்டி என்று இருந்தால் தானே நமது பலவீனங்களைக் கைவிடுவோம்;நமது முழுத் திறமையும் வெளிப்படும். . . ?

உண்மைதான்;உங்களை போட்டியில் இருந்தே விலக்கி,உங்கள் சிந்திக்கும் திறனை முடமாக்குபவர் உங்கள் போட்டியாளராக இருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?


ஜெயிக்குறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் உங்கள் போட்டியாளராக இருக்கின்றார்;அது உங்களுக்குத் தெரியவில்லை;

போட்டியின் இறுதிச் சுற்றில் படுதோல்வி அடைந்த பின்னர் தான் உங்கள் போட்டியாளர் எப்படி ஜெயித்தார்? என்பதை கண்டறிகின்றீர்கள்.மீண்டும் ஒரு இறுதிச் சுற்றுக்கு வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையை (படுதோல்வி அடைந்த பின்னர்) அறிந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?


(நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு) ஒண்ணும் செய்ய முடியாது;
ஆனால்,என்னிடம் நேர்மை இருக்கின்றதே. . .

அதுதான்;நாம் நேர்மையாக இருந்துவிட்டால்,நாம் உண்மையாகவும்,தர்மப் படி வாழ்ந்துவிட்டால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணுகின்றீர்கள் அல்லவா? அதுதான் உங்கள் பலவீனம்;

என்ன சொல்றீங்க? அது எப்படி பலவீனம் ஆகும்?

ஒரு பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்;காதலிலும் போரிலும் தர்மநியாயம் பார்க்கக் கூடாது;அங்கே வெற்றி மட்டுமே முக்கியம்;

நீதி,நேர்மையாக வாழ்ந்து வரும் நீங்கள் ஒரு மகத்தான வெற்றி பெற்றால்,உங்களை மட்டும் நம்பியுள்ளவர்களும் முன்னேறிவிடுவார்கள்;

பதிலாக,

பித்தலாட்டம்,சூது,நயவஞ்சகம் என்று மட்டும் வாழ்ந்து வருபவர்கள் ஜெயித்தால் என்ன ஆகும்?

அப்போ,என்னையும் நீதி,நேர்மை,தர்மம்,நியாயம் இதை எல்லாம் கைவிட்டுட்டு ஜெயிக்கச் சொல்றீங்களா?

(புன்னகையுடன்) இல்லை;இல்லவே இல்லை;உங்கள் நேர்மைத் தன்மை ஜெயிக்க,உங்களுக்கு உரிய ஆன்மீக பலத்தை அதிகப்படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம்;


அதுக்கு வாராஹி ஜபம் தான் செய்யணுமா? எத்தனை தெய்வங்கள் இருக்குது. . .

(குறுக்கிட்டு) இப்போதான் சரியான கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளீர்கள். . .

உங்கள் செல் போனை வெறும் 5 நிமிடம் சைலண்ட் மோடில் வைக்க முடியுமா?

எதுக்கு?

ஒரு கருத்தினை உங்கள் மனதில் பதிய வைக்கணும்னா இது அவசியம்;இன்றைய வேகமான உலகத்தில்,தேவையில்லாத இம்சையாக செல்போன் அழைப்புதான் முதலில் இருக்கு. . .


(கண்களை அகலமாக விரித்து) கரெக்ட்! நீங்க சொல்றது சரிதான்;
இதோ சைலண்ட் போட்டாச்சு,பேக்குக்குள்ளயும் போட்டுட்டேன்;
ம் இப்போ சொல்லுங்க


விநாயகர்,முருகன்,கருப்பசாமி,சுடலைமாடன்,பத்திரகாளி,
வனப்பேச்சி,வீரபத்திரர் என்று ஏராளமான தெய்வங்கள் இருக்கின்றார்கள்;இவர்களுக்கு முறையான பூஜை,அபிஷேகம் செய்து வந்தால் நாம் வேண்டும் வரத்தை இந்தக் கடவுள்கள் தந்துதான் ஆக வேண்டும்;பூஜை,அபிஷேகம் செய்தவர்கள் நேர்மையானவரா? ஊழல்,லஞ்சம்,பித்தலாட்டம் செய்தவரா? என்று எந்த தெய்வமும் பார்க்காது;

ஆனால்,மஹாவாராஹி என்ற வராகியை தினமும் ஜபிக்க ஆரம்பித்தால்,ஜபிக்க ஆரம்பித்த அன்றே நமது ஆத்மாவுக்குள் புகுந்து “நாம் யார்? நாம் நேர்மையாக வாழ்ந்து வருகின்றோமா? தர்மம்,நீதி,நேர்மையை நிலைநாட்டிட போராடுகின்றோமா?” என்று மஹாவாராஹியே கவனிப்பாள்;


யார் மனதால் கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைக்காமல்,தான் உண்டு,தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்ந்து வருகின்றார்களோ அவர்கள் தினமும் மஹாவாராஹியை ஜபித்து வந்தால்,ஓடோடி வந்து வரம் தருவாள்;நமது கண்ணின் இமை போல நம்மை பாதுகாப்பாள்;


சரி,எவ்வளவு நாட்கள் ஜபிக்க வேண்டும்?


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் ஜபிக்க வேண்டும்;

எப்போது ஜபிக்க வேண்டும்?

இரவு 7 மணி முதல் காலை 6 மணிக்குள் உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;

மஹாவாராஹி மந்திரம் என்ன?

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சம்ஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைதான் மஹாவாராஹி மந்திரம்;

ஓம் பஞ்சமீ நமஹ என்று சொல்லக் கூடாதா?

சொல்ல வேண்டிய அவசியம் இல்லை;

எந்த திசையை நோக்கி ஜபிக்க வேண்டும்?

கிழக்கு திசையை நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்க வேண்டும்; நீங்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அதற்கு உரிய சந்தர்ப்பம் அமையாத பட்சத்தில் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;

என்ன தீபம் ஏற்ற வேண்டும்?

ஒரு இலுப்பை எண்ணெய் தீபமும்,ஒரு நெய் தீபமும்


ஏன் மூன்று ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்?


நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் நமது உணவில் இயற்கைத் தன்மை குறைந்துவிட்டது;குடிக்கும் நீரில் இயற்கை தன்மை சுருங்கிவிட்டது;வாழும் வாழ்க்கையில் செயற்கைத் தன்மைகளும்,தீமைகளும் அதிகமாகிவிட்டதால்,நமது ஆத்ம பலம் பல மடங்கு குறைந்துபோய்விட்டது;அதை ஈடுசெய்ய ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 1008 நாட்கள். . . அதாவது சுமாராக 3 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டி இருக்கின்றது;


வீட்டில் மஹாவாராஹி ஜபம் செய்யலாமா? மஹாவாராஹி போட்டோ வைக்கலாமா?


இங்கே யாம் உபதேசம் செய்வது உபாசனை அல்ல;உபாசனையை இல்லறத்தில் இருப்பவர்களால் ஒரு நாள் கூட செய்ய முடியாது;பக்தி மார்க்கத்தின் மூலமாக ப்ரபஞ்ச அன்னை மஹாவாராஹியின் அருளைப் பெறும் முறையை மட்டுமே தெரிவிக்கின்றோம்;


கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு,300 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூர் பகுதி மக்கள் தினமும் அன்னை மஹாவாராஹியை ஜபித்து வந்தார்கள்;அதனால் தான்,16,000 நெல் ரகங்களை கண்டறிய முடிந்தது;தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜசோழ மன்னனால்,உலகத்தையே வெல்ல முடிந்தது;
மாவீரன் அலெக்ஸாண்டர் போரின் மூலமாக இன்றைய இத்தாலி முதல் இந்தியாவின் பஞ்சாப் வரையே கைப்பற்ற முடிந்தது;


ஆனால்,ராஜராஜ சோழனின் சோழ சாம்ராஜ்ஜியம் இன்றைய மொத்த ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம்,கடலுக்குள் முழுகிப் போன குமரிக் கண்டம் வரை பரவியிருந்தது;


சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது பாரத நாடு முழுவதும் ஒவ்வொருவரும் தினமும் அன்னை மஹாவாராஹியை ஜபித்து வந்தார்கள்;அதனால் தான் நமது நாட்டில் மட்டும் துரோகிகளே கிடையாது;


இன்றோ,ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு துரோகக் கூட்டம் பெரும் வெளிநாட்டுப் பணபலத்துடன் தேசத் துரோகச் செயல்களில் துணிந்து ஈடுபட்டு வருகின்றது;


தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஜபித்தால் என்ன ஆகும்?

அதைத் தாங்கும் ஆத்ம பலம் ஒரு கோடி மனிதர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த கலியுகத்தில் உண்டு;அது ஒரு வேளை நீங்களாக இருந்தால்,தினமும் 3 மணி நேரம் வரை ஜபியுங்கள்;

தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வாரம் வரை ஜபித்ததுமே,உங்கள் உடல் கடும் வெப்பமாக இருந்தாலோ அல்லது அதிகமான உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்தாலோ உடனடியாக ஒரு மணி நேர ஜபமாக குறைத்துவிடுங்கள்;


இந்த மஹாவாராஹி ஜபித்தை கோவிலுக்குள் ஜபிக்கலாமா?


அன்னை மஹாவாராஹியின் சன்னதிகள் அல்லது தனிக் கோவில்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக இருக்கின்றன;
நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்தால் இரவு 7 முதல் கோவிலின் இராக்கால பூஜை நிறைவு ஆகும் வரை ஜபிக்கலாம்;


மஹாவாராஹி உக்கிரமான பெண் தெய்வமே! எப்படி வீட்டில் ஜபிப்பது?


நமது நட்பு வட்டத்தில் யார் ரொம்ப கோபக் காரர்களோ,அவர்களே ரொம்பவும் பாசக்காரர்களாக இருக்கின்றார்கள்; என்பது உண்மையா இல்லையா?

உண்மை தான்!!!

அதே போலத்தான் அன்னை மஹாவாராஹியும்!


அப்போ,இல்லறத்தில் இருக்கக் கூடாதா?


இல்லறத்தில் இருந்து கொண்டே அன்னை மஹாவாராஹியின் அருளைப் பெறும் வழிமுறையைத் தான் உங்களுக்கு தெரிவித்திருக்கின்றோம்;


ஒரே நிபந்தனை:அசைவம் சாப்பிடக் கூடாது;மது அருந்தக் கூடாது;


தினமும் இரவில் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு இந்த ஜபத்தை ஜபித்துவிட்டு,தூங்கச் செல்லவும்;


அல்லது

அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குளித்துவிட்டு ஜபிக்கலாம்;உடல் சுத்தம் இங்கே முக்கியம்;


யாரெல்லாம் மஹாவாராஹியை தினமும் ஜபிக்கலாம்?


18 வயது நிரம்பியவர்கள்
நிம்மதியான வாழ்க்கை (வம்பு,வழக்கு இல்லாமல்) வாழ விரும்புவோர் யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்;

சீக்கிரம் அன்னை மஹாவாராஹியின் அருளைப் பெறுவது எப்படி?


இதிலும் அவசரமா. . . வராகி மாலை என்ற வராகி பரணி என்ற பாடலை ஒரு நாளுக்கு ஐந்து முறை வீதம் 90 நாட்கள் ஜபித்து வர வேண்டும்; பெண்களாக இருந்தால் விட்டு விட்டாவது 90 நாட்கள் ஜபிக்க வேண்டும்; அதன் பிறகு 91 வது நாள் முதல் 1008 வது நாள் வரை தினமும் ஒரு முறை ஜபித்தால் போதும்;


வராகி மாலை என்பது 32 பாடல்களின் தொகுப்பு; ஒரு பாடல் 4 வரிகளைக் கொண்டது;இதற்கு வராகி அந்தாதி என்று ஒரு பெயரும் உண்டு;


இதைத் தவிர,வேறு தெய்வங்களை வழிபடலாமா?


குல தெய்வ வழிபாடு முதன்மையானது;அன்னை மஹாவாராஹியை இஷ்ட தெய்வமாக நாம் தான் ஆக்கிக் கொள்ள வேண்டும்;அப்படி ஆக்கிக் கொண்டால்,துரோகிகளும்,எதிரிகளும் ஒரு போதும் (3 ஆண்டு ஜபித்திற்குப் பிறகு) உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடவே மாட்டார்கள்;


மிகப் பெரும் புண்ணியம் செய்தவர்களால் தான் இந்த அன்னையை தினமும் ஜபிக்க முடியும் என்று வராகி கல்பம் தெரிவிக்கின்றது;


$ இப்போது நீங்கள் உங்கள் செல்போனின் சைலண்ட் மோடினை ஆப் செய்யலாம்;


No comments:

Post a Comment